இந்தியர்களை ராணுவத்தில் சேர்ப்பதை நிறுத்தி விட்டோம்: ரஷ்யா

2 mins read
e3b31ad1-5873-4fe6-bfbd-410d42441ec1
ரஷ்ய ஆயுதப் படைகளில் இந்தியர்களை ஆட்சேர்ப்பு செய்வது ஏப்ரல் முதல் நிறுத்தப்பட்டுவிட்டது. - படம்: த மாஸ்கோ டைம்ஸ்

மாஸ்கோ: ரஷ்யா-உக்ரேன் இடையே போர் நடந்து வருகிறது. இப்போரில் ரஷ்ய ராணுவத்தில் இந்திய இளைஞர்கள் உதவியாளர்களாகச் சேர்க்கப்பட்டு சண்டையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ரஷ்யாவில் வேலை வாங்கித் தருவதாக முகவர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்களை வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவத்தில் சேர்த்ததாகத் தகவல் வெளியானது.

இதற்கிடையே ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய எட்டு இந்திய இளைஞர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து இந்திய இளைஞர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. அண்மையில், பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டபோது ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் புட்டினிடம் வலியுறுத்தினார். இதை ரஷ்யா ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில் இந்தியர்களை ராணுவத்தில் சேர்ப்பது நிறுத்தப்பட்டுள்ளது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்யத் தூதரகம் தனது அறிக்கையில், “ரஷ்ய ராணுவத்தில் பணிபுரியும் இந்திய குடிமக்களின் பிரச்சினை குறித்து கருத்துத் தெரிவிக்க ஊடகங்களில் இருந்து பல கோரிக்கைகள் வந்தன. உக்ரேனில் ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையின்போது இந்தியர்களின் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளுக்கு இந்திய அரசுக்கும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தூதரகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

“ரஷ்யாவில் ராணுவ சேவைக்காக தானாக முன்வந்து ஒப்பந்தம் செய்த இந்தியர்களை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களை வெளியேற்றுவதற்கு இரு நாடுகளும் ஒருங்கிணைப்புடன் செயல்படுகின்றன. ரஷ்ய ஆயுதப்படைகளில் இந்தியர்களை ஆட்சேர்ப்பு செய்வது ஏப்ரல் முதல் நிறுத்தப்பட்டுவிட்டது. அனைத்து ஒப்பந்தக் கடமைகள் மற்றும் உரிய இழப்பீட்டுத் தொகைகள் முழு அளவில் நிறைவேற்றப்படும்.

ரஷ்ய அரசாங்கம் “ராணுவத்தில் ஆட்சேர்ப்பு குறித்து எந்தவொரு பொது அல்லது தெளிவற்ற பிரசாரங்களிலும் ஈடுபடவில்லை,” என்று தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்