திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருமணங்கள் இலவசமாக நடத்தப்படுவதுடன் மற்றச் சேவைகளும் குறைந்த கட்டணத்தில் தொடர்ந்து வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலைப் பூசாரிகள் இலவசமாக திருமணத்தை நடத்தி வைப்பார்கள். தேவையான பூக்கள், உணவுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் என்று தேவஸ்தானம் கூறியது.
திருமலை, பாப்பா வினாசனம் சாலையில் அமைந்துள்ள கல்யாண வேதிகாவில் பூசாரிகள் சங்கம் மூலம் மக்களுக்குத் தேவையான பல்வேறு பாரம்பரியச் சடங்குகளை திருப்பதி தேவஸ்தானம் எல்லாத்தரப்பினர்க்கும் கட்டுப்படியாகக்கூடிய கட்டணத்தில் வழங்குகிறது.
பெயர் வைக்க ரூ.200, காது குத்து ரூ.50, மேளம் (ஒரு செட்) ரூ.100, மேளம் (இரண்டு செட்) - ரூ.300, பிற சமயச் சடங்குகள் ரூ.200 என்று மிகவும் குறைந்த கட்டணத்தில் சேவைகள் வழங்கப்படுகின்றன.
திருமணம், காது குத்துதல் போன்ற முக்கியச் சடங்குகள் முறைப்படி நடைபெறும் என்றும் மக்களின் வசதிக்காக அந்தச் சேவைகள் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் என்றும் தேவஸ்தானத்தின் இணை செயல் அலுவலர் வீர பிரம்மம் கூறினார்.
திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் இலவசத் திருமணங்களுக்குப் புதுமணத் தம்பதியினரும் பெற்றோர்களும் பெரிதும் வரவேற்பளித்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் திருமலையில் இலவசத் திருமணச் சேவை நடைபெற்று வருகிறது. இது தொடரும் என்றும் மற்றச் சேவைகளும் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் என்றும் அது கூறியது.
சேவைகளைப் பெற திருமலை கல்யாண வேதிகாவில் அமைந்துள்ள பூசாரிகள் சங்கத்தைத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

