பிஜ்னோர்: கணவனைக் கட்டிப்போட்டு, அவரது பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடுவைத்துத் துன்புறுத்திய பெண்ணைக் காவல்துறை கைதுசெய்தது.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், பிஜ்னோரைச் சேர்ந்த மனன் ஸைடி என்பவர் காவல் நிலையத்தில் தன் மனைவி மெகர் ஜகான்மீது புகாரளித்தார்.
அப்புகார் மனுவில், மெகர் தனக்கு போதை மருந்து கொடுத்து, தன் கைகால்களைக் கட்டிப் போட்டு, தன் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடுவைத்ததாக ஸைடி குறிப்பிட்டிருந்தார்.
அதற்குச் சான்றாக, கண்காணிப்புப் படக்கருவியில் காணொளியையும் அவர் காட்டினார்.
மெகர் தன் கணவன் ஸைடியைத் தாக்குவதும், அவரது கைகால்களைக் கட்டிப்போட்டு, அவரது நெஞ்சில் ஏறி அமர்ந்துகொண்டு கழுத்தை நெரிக்க முயல்வதும் அக்காணொளியில் தெரிந்தது.
பின்னர், சிகரெட்டால் ஸைடியின் பிறப்புறுப்பில் மெகர் சூடுவைப்பதையும் அக்காணொளி காட்டியதாக ‘இந்தியா டுடே’ செய்தி கூறியது.
ஸைடியின் குடும்பத்தினர் கடந்த சனிக்கிழமை (மே 4) தங்களுக்குத் தகவல் தெரிவித்ததாகக் காவல்துறை உயரதிகாரி தரம் சிங் மர்ச்சால் தெரிவித்தார்.
இதனையடுத்து, இம்மாதம் 5ஆம் தேதி மெகர் ஜகானைக் கைதுசெய்த காவல்துறை, அவர்மீது கொலை முயற்சி வழக்கு பதிந்துள்ளது.
இதனிடையே, தனியார் மருத்துவமனையில் ஸைடி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.