அசாம்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள நிலக்கரிச் சுரங்கமொன்றில் ஒன்பது ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்திடம் உதவி கோரியுள்ளதாக அதிகாரிகள் திங்கட்கிழமை (ஜனவரி 6) தெரிவித்தனர்.
திங்கட்கிழமை மாலை நிலவரப்படி மீட்புப் பணிகள் நடைபெறுவதாகக் கூறப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமையன்று மூன்று உடல்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சுரங்கத்தில் ஓரிலக்க எண்ணிக்கையிலான ஊழியர்கள் சிக்கியிருப்பதாகத் தெரிகிறது என்றும் மாநிலப் பேரிடர் உதவிப் படையிடம் உதவி கோரப்பட்டுள்ளது என்றும் அசாம் மாநில காவல்துறைத் தலைவர் ஜிபி சிங் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.
அந்தச் சுரங்கம், உள்ளடங்கிய மலைப்பகுதியில் அமைந்துள்ளது. அதில் வெள்ளம் சூழ்ந்ததில் சுரங்க ஊழியர்கள் சிக்கிக்கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறின.
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, “மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் வேளையில் ராணுவத்திடம் உதவி கேட்டுள்ளோம். மாநில, தேசியப் பேரிடர் உதவிப் படைகள் சம்பவ இடத்திற்குச் சென்றுகொண்டுள்ளன,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சுரங்கம் மிகவும் உள்ளடங்கிய பகுதியில் இருப்பதாகவும் அங்கே சென்றடைவதில் சிரமம் நிலவுவதாகவும் உள்ளூர் அதிகாரிகள் கூறினர்.