புதுடெல்லி: தியானம், யோகா போன்றவற்றின் சிறப்புகளைச் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
‘யோக நித்திரை’ என்பது அத்தகைய ஒரு நடவடிக்கை. விழிப்புணர்வுடன்கூடிய உறக்கம் என்று இதைச் சொல்லலாம்.
இதன் மூலம் ஒருவரின் மனநலனோடு உடல் நலனையும் மேம்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
இதன் பலனை அறிவியல் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது அண்மைய ஆய்வு ஒன்று.
இந்தியாவின் ‘ஐஐடி டெல்லி’ கல்விக்கழகம், ‘எய்ம்ஸ் டெல்லி’ மருத்துவமனை, ‘மகாஜன் இமேஜிங் டெல்லி’ நிலையம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
‘சயின்டிஃபிக் ரிபோர்ட்ஸ்’ சஞ்சிகையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.
வழக்கமாக தியானம் அல்லது யோகா பயிற்சி செய்யும் 30 பேர் ஒரு குழுவாகவும் அப்படி ஏதும் செய்யாத 30 பேர் மற்றொரு குழுவாகவும் ஆய்வில் பங்கேற்றனர்.
தியானம் செய்தவர்கள் ஏற்கெனவே கிட்டத்தட்ட 3,000 மணி நேரம் அதைக் கடைப்பிடித்தவர்கள் என்று கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பங்கேற்றோரின் மூளைச் செயல்பாடு ‘எம்ஆர்ஐ’ தொழில்நுட்பத்தின் துணையோடு கண்காணிக்கப்பட்டது.
‘யோக நித்திரை’ பயிற்சியை மேற்கொள்வதால் மூளைக்கு நன்மை கிடைப்பதை இந்த ஆய்வு உறுதிசெய்தது.
இதைச் செய்பவருக்கு அலைபாயும் மனத்தைக் கட்டுப்படுத்துவது எளிதில் கைகூடும் என்பது உறுதியானது.
கூடுதல் நேரம் தியானம் அல்லது யோகா செய்தவர்களுக்குக் கூடுதல் பலன் கிட்டுவதும் தெரியவந்தது.
‘யோக நித்திரை’ பயிற்சியில் ஒருவர் படுத்தவாறே ஒலிப்பதிவு செய்யப்பட்ட முறையான வழிகாட்டுதலைப் பின்பற்றி அவரது உடலின் பல்வேறு பாகங்கள் குறித்தும் சுவாசம் குறித்தும் விழிப்புணர்வைப் பெறுவார். இது அவருக்கு ஆழ்ந்த மனஅமைதியையும் தருகிறது.

