ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் அக்டோபர் 21ஆம் தேதி அதிகாலையில் ஓர் இளையர் ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடி சன்னல் வழியே விழுந்து உயிரிழந்தார்.
சாயம் பூசும் ஊழியரான உதய் குமாருக்கு வயது 22.
விவி பிரைட் எனும் ஹோட்டலில் நடந்த தனது நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள அவர் சென்றிருந்ததாக இந்தியாவின் ‘த இந்து’ செய்தித்தாள் தெரிவித்தது.
நள்ளிரவுக்குச் சிறிது நேரம் கழித்து ஹோட்டலில் நாய் ஒன்றைப் பார்த்த உதய் குமார் அதனுடன் விளையாடத் தொடங்கியதாகக் காவல்துறையினர் கூறினர்.
வேகமாக ஓடிய அவர் திடீரென வேகத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் ஹோட்டலின் மூன்றாவது மாடி சன்னல் வழியே கீழே விழுந்ததாகவும் சம்பவ இடத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாகவும் கூறப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில் திறந்திருக்கும் சன்னலை நோக்கி உதய் நாயைத் துரத்திச் செல்வதைக் காணமுடிகிறது.
நாய் வேகமாக வலப்பக்கம் திரும்பிய நிலையில் உதய் சன்னல் வழியே கீழே விழுவதும் அக்காணொளியில் தெரிகிறது.
உதய் குமாரின் மரணம் குறித்துக் காவல்துறை விசாரணை தொடர்கிறது.

