உலகைக் கைக்குள் கொண்டுவரும் திறன்பேசி எல்லாருக்கும் ஒரு வரமாக இருக்கலாம்.
ஆனால், அவற்றை அடிக்கடி மின்னூட்டம் (Charge) செய்ய வேண்டியிருப்பது சிலருக்கு எரிச்சலூட்டலாம். அவர்களுக்கு மட்டுமன்று, இது அனைவருக்குமே ஒரு நற்செய்தியாக இருக்கும்!
இந்நிலையில், மறுமுறை மின்னூட்டம் செய்யத் தேவையில்லாத மின்கலத் தொழில்நுட்பத்தை ஒரு சீன நிறுவனம் உருவாக்கி வருகிறது.
‘பீட்டாவோல்ட் டெக்னாலஜி’ எனும் அந்நிறுவனம், கைப்பேசிகளுக்கு மின்சாரம் வழங்க பொருத்தமான ‘ரேடியோநியூக்ளைடு’ மின்கலத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இவ்வகை மின்கலங்களின் விலை அதிகம். ஆனால், நீண்டகாலம் உழைக்கக்கூடியவை. இவற்றின் ஆற்றலும் அதிகம். அதாவது, நீண்டகாலத்திற்கு மின்னாற்றலை வழங்க வல்லவை. பொதுவாக, இவை விண்கலம், இதயமுடுக்கி (பேஸ்மேக்கர்), நீரடிக் கருவிகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
நூறு மைக்ரோவாட் மின்சாரத்தை வழங்கவல்ல தனது முதல் மின்கல மாதிரியை ‘பீட்டாவோல்ட்’ உருவாக்கிவிட்டதாக ‘வின்ஃபியூச்சர்’ செய்தியறிக்கை தெரிவிக்கிறது.
அத்தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்தி, அடுத்த ஈராண்டுகளுக்குள் சிறிய மின்கலங்களை உருவாக்க அந்நிறுவனம் விரும்புகிறது. அச்சிறிய மின்கலங்கள் மூலம் திறன்பேசிகளுக்கு மின்சாரம் வழங்கலாம்.
அவ்வகை மின்கலம் கதிரியக்கம் மூலம் மின்சாரத்தை உருவாக்குகின்றது ஆயினும், மின்கலத்திலிருந்து கதிரியக்கம் வெளியாகாது என்றும் அதன்மூலம் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள்கள் உருவாகா என்றும் ‘பீட்டாவோல்ட்’ நிறுவனம் கூறுகிறது.
மேலும், அம்மின்கலம் 50 ஆண்டுகள்வரை மின்சாரத்தை வழங்கவல்லது என்றும் அது 60 முதல் 120 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குள் செயல்படும் என்றும் சொல்லப்படுகிறது.