தீபாவளியன்று அறுசுவை உணவு என்பது அவசியம். ஆனால், விலைவாசி உயர்ந்துள்ள நிலையில், அதற்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள்களை வாங்க சிலர் சிரமப்படுகின்றனர். சில முதியோரால் அங்குமிங்கும் அலைந்து அவற்றை வாங்கவும் முடிவதில்லை.
சனிக்கிழமை (அக்டோபர் 26) காலை ஹாவ் ரன் ஹாவ் ஷி, புரோஜெக்ட் ஸ்மைல், ஸ்ரீ சத்ய சாய் பாபா பார்ட்லி நிலையம் ஆகிய அறநிறுவனங்களும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலும் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக இணைந்து நன்கொடை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தன.
முதியோரையும் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்மணிகளையும் மாணவர்[Ϟ]களையும் சேர்த்து மொத்தம் 100க்கும் மேற்பட்டோர் மளிகைப் பொருள்களைப் பெற்று நிகழ்ச்சியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
அந்நிகழ்ச்சி, கோயிலின் பிஜிபி மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் (ஏஐசி) தலைமை நிர்வாகி தினேஷ் வாசு தாஸ் வருகை அளித்தார்.
மாதத்திற்கு இதுபோன்ற பத்து உணவு விநியோ[Ϟ]கங்களைச் செய்துவரும் ஹாவ் ரன் ஹாவ் ஷி, ஸ்ரீ சத்ய சாய் பாபா பார்ட்லி நிலையத்துடன் இணைந்து நிதி திரட்டி, மளிகைப் பொருள்களை வாங்கியிருந்தது.
சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையிலிருந்து (எஸ்ஐஇடி) 17 மாணவர்களும் ‘புரோஜெக்ட் ஸ்மைல்’ திட்டத்திலிருந்து ஏறக்குறைய 60 முதியோரும் 20க்கும் மேற்பட்ட குறைந்த வருமானம் ஈட்டும் பெண்மணிகளும் தங்களுக்கு விருப்பமான மளிகைப் பொருள்களைத் தேர்ந்தெடுத்தனர்.
அவற்றில், தீபாவளி முறுக்கு, பரோட்டா, இடியாப்பம், மேகி மீ, பால், மாம்பழம், அரிசி போன்ற உணவுகளோடு சலவைத் தூள், பற்பசை போன்ற வீட்டுப் பொருள்களும் உள்ளடங்கின.
தாமான் ஜூரோங் செயின்ட் ஆண்ட்ரூஸ் தாதிமை இல்லத்துக்கும் 20 மளிகைப் பொருள் பைகள் அனுப்பப்பட்டன.
புரோஜெக்ட் ஸ்மைல் பயனாளிகளுக்கு மலபார் தங்க, வைர நிறுவனம் 37 பரிசுப் பைகளையும் வழங்கியது.
சென்ற ஆண்டு, பெக் கியோ சமூக நிலையப் பட்டியலின்படி 80 -100 வசதிகுறைந்த பல்லினக் குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இவ்வாண்டு, பயனாளிகள் பெரும்பாலும் இந்தியர்களாக இருந்தனர். “தீபாவளி என்பதால் இவ்வாண்டு இந்தியர்களை மையப்படுத்தினோம்,” என்றார் ஹாவ் ரன் ஹாவ் ஷி சார்பில் நிகழ்ச்சியை வழிநடத்திய விக்னேஷ்.
இவ்வாண்டு முதன்முறையாக ஆடல் பாடல்களுடன் இணைந்த தீபாவளி நிகழ்ச்சியும் இடம்பெற்றது. ‘ஜோய்ஃபுல் டான்சர்ஸ்’ குழுவிலிருந்து நடனமணிகள் பரதநாட்டியம் படைத்ததோடு, பாங்ரா நடனத்தில் முதியோர், சிறுவர்கள் என அனைவரையும் ஈடுபடுத்தி புத்துணர்ச்சி அளித்தனர்.
நாற்காலி யோகா, சிரிப்பு [Ϟ]யோகா போன்றவற்றை அனைவரும் உற்சாகமாகச் செய்தனர். பெருமாள் கோயில் மதிய உணவையும் வழங்கியது.
“இது ஒரு முக்கிய நிகழ்ச்சி. அனைவருக்காகவும் ஆண்டுதோறும் செய்ய முடிந்தால் நல்லது.
“நாற்காலி யோகா, நடக்க முடியாத முதியோருக்கு மிகவும் பயனுள்ள உடற்பயிற்சி. அனைத்துத் துடிப்பான மூப்படைதல் நிலையங்களிலும் இதனைக் கூடுதலாக வழங்கத் திட்டமிட்டுவருகிறோம்,” என்றார் திரு தினேஷ்.
“நான் தனியாகத் தங்கியிருக்கிறேன். அதனால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் எனக்குப் பிடிக்கும். நல்ல, பயனுள்ள பொருள்களைத் தந்துள்ளார்கள்,” என மகிழ்ச்சி[Ϟ]யுடன் கூறினார் புரோஜெக்ட் ஸ்மைல் பயனாளி குமுதவள்ளி, 71.
“தீபாவளி நெருங்கிவிட்டாலும் இன்று நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது,” எனப் பாராட்டினார் ஸ்ரீ சத்ய சாய் பாபா நிலையத் தொண்டூழியர் லெட்சுமணன் மாரியப்பன், 83.
புரோஜெக்ட் ஸ்மைல் திட்டத்தின்வழி ஒவ்வொரு புதன்கிழமையும் வியாழக்கிழமையும் 50 வயதுக்கு மேற்பட்டோர் காலை 10 முதல் நண்பகல் 12 மணிவரை பெருமாள் கோயிலில் ஆரோக்கிய வாழ்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். நேரில்கூட பதிவுசெய்து கலந்துகொள்ளலாம்.
“வயதான காலத்தில் தனியாக இருப்பது சலிப்படைய வைக்கும். இங்கு வந்து அனைவருடனும் பேசும்போது கலகலப்பாக இருக்கும்,” என்றார் யோகாவில் பங்குபெறும் ஜி சரோஜா, 69.
“புரோஜெக்ட் ஸ்மைல் திட்டத்தில் கூடுதலான உள்ளூர் மக்கள் வழக்கமான (regular) தொண்டூழியர்களாகச் சேர்ந்தால் சிறப்பாக இருக்கும்,” என்றார் புரோஜெக்ட் ஸ்மைல் தலைவர் ராஜலட்சுமி.

