கிடை போடுவோரின் வாழ்வியலைப் பேசும் ‘குளம்படி’

கிடை போடுவோரின் வாழ்வியலைப் பேசும் ‘குளம்படி’

1 mins read
1c59bde4-804f-438f-88fc-65dd6513d447
வெற்றிச்செல்வன் இராசேந்திரன் (இடமிருந்து இரண்டாவது) எழுதிய ‘குளம்படி’ புதினம் வெளியீட்டு நிகழ்ச்சி, தேசிய நூலகத்தின் 16ஆம் தளத்திலுள்ள ‘தி பாட்’ அரங்கில் இடம்பெற்றது. - படம்: வெற்றிச்செல்வன் இராசேந்திரன்

மேய்ச்சல் தொழிலையும் கிடை போடும் மக்களின் வாழ்வியலையும் பற்றிப் பேசும், கவிஞர் வெற்றிச்செல்வன் இராசேந்திரன் எழுதிய ‘குளம்படி’ எனும் புதினம் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி சிங்கப்பூரில் வெளியீடு கண்டது.

நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, கவிமாலை அமைப்பின் ஏற்பாட்டில் தேசிய நூலகத்தின் 16ஆம் தளத்தில் ‘தி பாட்’ அரங்கில் இடம்பெற்றது.

நூலாசிரியர் கிடைத்தொழிலைப் பின்புலமாகக் கொண்டவர் என்பதால், அத்தொழில் புரியும் மக்களின் அகவாழ்வு முறையை மையமாகக் கொண்டு நூலை எழுதியுள்ளார்.

கவிஞர் அ. பிரபாதேவி நிகழ்ச்சி நெறியாளராகச் செயலாற்றினார். கவிஞர் புதுமைத்தேனீ மா. அன்பழகன் தலைமை தாங்க, கவிமாலை நிறுவனர் பிச்சினிக்காடு இளங்கோவும் கவிமாலைத் தலைவர் கவிஞர் இன்பாவும் வாழ்த்துரை வழங்கினர்.

‘குளம்படி’ நூல் உருவான விதமும் அது பேசும் களமும் என்ற தலைப்பில் கவிஞர் அழகுராஜன் விரிவாகப் பேசினார். கவிஞர் வாலீஸ்வரன் நூலறிமுகம் செய்ய, அவரைத் தொடர்ந்து கதைசொல்லி செவியின்பம் சங்கீதா நூல் பற்றிய தனது பார்வையினை விரிவாக முன்வைத்தார். அவரைத் தொடர்ந்து, நூலைப் பதிப்பித்த யாழிசைப் பதிப்பகத்தின் உரிமையாளர் தமிழாசிரியர் த. இளங்குமரன் உரையாற்றினார்.

பின்னர் கவிஞர் மா. அன்பழகன் நூலை வெளியிட, தமிழ்கியூப் நிறுவனர் A.T பிள்ளை, திரு இளங்குமரன், தமிழார்வலர் நாணற்காடன் ஆகியோர் அதனைப் பெற்றுக்கொண்டனர்.

இறுதியாக, நூலாசிரியர் வெற்றிச்செல்வன் நூல் உருவாகவும் வெளியாகவும் உதவியோர்க்கும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தோர்க்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்