சிங்கப்பூரில் கோல்ஃப் விளையாட்டுக்கென்று தனியோர் இடமுண்டு. அரசதந்திர உறவுகளை வலுப்படுத்துவது, தேசிய விளையாட்டாளர்களை உருவாக்குவது, நிதி திரட்டுவதற்கு முன்னணி விளையாட்டாகத் திகழ்வது உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது கோல்ஃப் விளையாட்டு.
எனினும், இந்த விளையாட்டுக்குத் தனித்த பெரிய திடல்கள் தேவைப்படுவதால் இவ்விளையாட்டு நிலப் பற்றாக்குறையுள்ள சிங்கப்பூரில் மெல்ல குறைந்து வருகிறது.
பல கோல்ஃப் திடல்கள் மறைந்துவிட்டன. 2001ஆம் ஆண்டில் 22ஆக இருந்த கோல்ஃப் மைதானங்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 16க்குக் குறைந்தது.
இதில், சிங்கப்பூர் ஐலண்ட் கன்ட்ரி கிளப் மைதானம் (புக்கிட்), கெப்பல் கிளப் மைதானம் (சைம்), மண்டாய் எக்ஸிகியூட்டிவ் கோல்ஃப் மைதானம், வாரன் கோல்ஃப் மற்றும் கன்ட்ரி கிளப், ஆர்க்கிட் கன்ட்ரி கிளப், தானா மேரா கன்ட்ரி கிளப்பின் கார்டன் மைதானம் ஆகிய அந்த ஆறு கோல்ஃப் திடல்கள் 2035ஆம் ஆண்டுக்குள் நிரந்தரமாக மூடப்படும்.
அவற்றின் குத்தகைக் காலம் புதுப்பிக்கப்படாததும், அவற்றின் நிலம் எதிர்காலத் திட்டங்களுக்கு தேவைப்படுவதும் மூடலுக்குக் காரணம்.
அதன் விளைவாக உறுப்பினர் கட்டணம், உட்புற, மெய்நிகர் கோல்ஃப் ஆகியவற்றை தெரிவுசெய்வோர் எண்ணிக்கை ஆகியவை அதிகரித்த வண்ணம் உள்ளன.
தற்போது 140,000க்கும் மேலான கோல்ஃப் விளையாட்டாளர்கள் கோல்ஃப் திடல்களிலும் 70,000 பேர் உட்புற மெய்நிகர் கோல்ஃப் விளையாட்டிலும் ஈடுபடுவதாக சிங்கப்பூர் கோல்ஃப் சங்கம் தெரிவித்தது.
கோல்ஃப் வரலாற்று நிகழ்வுகள்
கடந்த 1984ல் தானா மேரா கன்ட்ரி கிளப் திறப்பு விழாவில், முன்னாள் துணைப் பிரதமரும் கோல்ஃப் ஆர்வலருமான டாக்டர் கோ கெங் சுவீ மற்ற விளையாட்டுகளுடன் ஒப்பிடுகையில் கோல்ஃப் விளையாட்டை “ஆன்மாவுக்குச் சிறந்தது” (good for the soul) என வர்ணித்தார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2003ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் கோ சோக் டோங், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் ஆகிய இருவரும் இணைந்து நள்ளிரவில் விளையாடிய கோல்ஃப் சிங்கப்பூர்-அமெரிக்க உறவில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதனையடுத்து அவ்விரு நாடுகளுக்கிடையிலிருந்த சில கசப்புகள் மறைந்ததுடன், தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தானது.
அரசதந்திரிகள், அமைச்சர்களுக்கிடையே நல்லுறவை வளர்க்கக்கூடிய ஒரு விளையாட்டாக முன்னாள் துணைப் பிரதமர் எஸ் ஜெயகுமார் கோல்ஃப் விளையாட்டை வகைப்படுத்தினார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமரான அமரர் திரு லீ குவான் யூவுக்கு, கோல்ஃப் அவரது தலைமைத்துவத்தின் பிரதிபலிப்பு. கோல்ஃப் திடல்களில் அவர் கடைப்பிடித்த அதே பொறுமை, துல்லியமான திட்டமிடுதல், உத்திப்பூர்வ, நுணுக்கமான அணுகுமுறை அவரின் தலைமைத்துவத்திலும் ஒலித்தது.
விளையாட்டாளர்களின் அக்கறை
என்டியுசி கிளப்பின் மை கோல்ஃப் காக்கி (My Golf Kaki), அதன் கிரீன்போக்ஸ் (GreenBox) உட்புற மெய்நிகர் பாவனை பயிற்சி ஆகியவை கோல்ஃ ப் விளையாட்டை அதிகமானோரிடம் கொண்டு சேர்க்க உதவியுள்ளன. கோல்ஃப் விளையாட அண்டை நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டு என்பதால் இவ்விளையாட்டின் எதிர்காலம் குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்று கூறினர் சில விளையாட்டாளர்கள். எனினும் திடல்கள் அருகி வருவது, சில விளையாட்டர்களுக்குக் கவலை அளிக்கிறது.
நாற்பது வயதில் நண்பர் மூலம் கோல்ஃப் விளையாட்டுக்கு அறிமுகமானார் காயத்ரி உணவகத்தின் நிறுவனரும் ஆர்க்கிட் கன்ட்ரி கிளப்பின் உறுப்பினருமான திரு சண்முகம் கணேசன், 62.
உடல் நலத்தை பேணவும் மற்றவர்களைச் சந்தித்து தொடர்புகளை ஏற்படுத்தவும் இவ்விளையாட்டை ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறார். கோல்ஃப் விளையாட்டுக்காக வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் அவர், “ஜோகூர், பாத்தாம் போன்ற அண்டை நாடுகளில் கோல்ஃப் வசதிகள் இருப்பதால், உள்ளூர் கோல்ஃப் மைதானங்கள் மூடப்படுவது எனக்கு அவ்வளவு பெரிய இழப்பாகத் தெரியவில்லை,” என்றார்.
ஐந்து வயதில் கோல்ஃப் விளையாட்டுக்கு அறிமுகமானார் திரு முருகைய்யா மாடசாமி, 61. சிலேத்தார் கோல்ஃப் கிளப்பில் முதல்முறையாக கோல்ஃப் மட்டையை ஏந்திய அவர், தற்போது வாரன் கோல்ஃப் மற்றும் கன்ட்ரி கிளப்பின் பயிற்சித் திடலை நடத்தி வருகிறார். கிட்டத்தட்ட 200 நிபுணத்துவ கோல்ஃப் விளையாட்டாளர்களை வழிநடத்துகிறார்.
“கோல்ஃப் தான் எனக்கு எல்லாமே. இந்த கோல்ஃப் மைதான மூடல் கோல்ஃப் விளையாட்டுக்கு நல்லதல்ல” என்ற அவர் இதற்கடுத்து நாம் எங்கு செல்லப்போகிறோம் என்ற கவலையைப் பகிர்ந்துக்கொண்டார்.
கோல்ஃப் மைதானத்தில் நேரடியாக விளையாடும் அனுபவத்துக்கு உட்புறம் அல்லது மெய்நிகரில் கோல்ஃப் விளையாடுவது என்றும் ஈடாகாது என்றார் திரு முருகைய்யா.
ராஃபிள்ஸ் கன்ட்ரி கிளப்பின் முன்னாள் துணைத் தலைவரும் வாரன் கோல்ஃப் மற்றும் கன்ட்ரி கிளப்பின் முன்னாள் தலைவருமான 67 வயது திரு சந்திரசேகரன் கோபால், எட்டு வயதில் கோல்ஃப் விளையாடத் தொடங்கினார்.
கோல்ஃப் திடல்களை மூடும் அரசாங்கத்தின் முடிவு வருத்தமளிக்கிறது என்றாலும் ஒருவகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றார் அவர். கோல்ஃப் விளையாட்டாளர்களின் எண்ணிக்கையை காட்டிலும், அந்த நிலத்தை எதிர்காலத் திட்டங்களுக்கு ஒதுக்குவதால் அதிகமானோர் பயனடைவர் என்ற அவர், கோல்ஃப் தொடர்ந்து நீடித்திருக்கும் என்றபோதும், உயர்ந்து வரும் கட்டணங்கள் இளையர்களை ஈர்ப்பதை சிரமமாக்கும் என்று கூறினார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் இளம் கோல்ஃப் விளையாட்டாளர்களை உருவாக்கி வந்துள்ள திரு பால்ராஜ் மடசாமி, 63, புக்கிட், சைம் திடல்களை சரியான முறையில் திட்டமிட்டால், கோல்ஃபை மீண்டும் அனைவரையும் உள்ளடக்கும் ஒரு விளையாட்டாக மாற்றலாம் என்றார்.
தமது 22வது வயதில், முன்னைய சிலேத்தார் கிளப், செம்பவாங் கன்ட்ரி கிளப் ஆகியவற்றில் தமது மாமா பி.எம். சாமியின் வழிகாட்டுதலுடன் அவரது பயணம் தொடங்கியது.
1990ல் நிபுணராக கோல்ஃப் பயிற்றுவிப்பாளராக ஆனதிலிருந்து, கோல்ஃப் விளையாட்டின் மீது தனது ஆர்வத்தைத் தொடர்ந்து பேணிவந்தார் பால்ராஜ்.
சிங்கப்பூரில் கோல்ஃப் விளையாடும் சில இந்திய பெண்களில் ஒருவர் 37 வயது குமாரி நசிரா பானு ராமிரெஸ்.
2016 ஆம் ஆண்டில் கோல்ஃப் விளையாட்டுக்குக் அறிமுகமான அவர் ஒரு பிரத்தியேக விளையாட்டுக்குள் முன்பின் அனுபவமின்றி நுழையும் சவால்களை நினைவுக்கூர்ந்தார்.
“கோல்ஃப் எளிய விளையாட்டல்ல. இந்த விளையாட்டை முழுமையாகப் புரிந்துகொள்ள நிறைய பயிற்சித் தேவை. நான் விளையாடத் தொடங்கியபோது பல பொது கோல்ஃப் திடல்கள் இருந்தன. இப்போது, சில மைதானங்கள் மூடப்படுவது புதிதாக வரும் விளையாட்டாளர்களுக்கு ஒரு தடையாக இருக்கும்,” என்றார் குமாரி நசிரா.
நசிரா போன்றோர், புதியவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்க கூடிய, பயிற்சி பெற உதவும் பொதுக் கோல்ஃப் மைதானகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
தற்போது கோல்ஃப் விளையாட்டாளர்கள் பலர் கடல் கடந்து மலேசியா பாத்தாம் போன்ற நாடுகளில் கோல்ஃப் விளையாடுகின்றனர்.
இப்போக்கு போக்குவரத்து நெரிசல், விலை உயர்வு ஆகியவற்றை ஏற்படுத்திலாலும், நாணய அடிப்படையில் பார்த்தால் சிங்கப்பூரர்களுக்கு அது ஒரு பிரச்சினையாக இருக்காது என்பது குமாரி நசிரா போன்ற பல கோல்ஃப் விளையாட்டாளர்களின் கருத்து.

