தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆரோக்கியத்துக்காக அடியெடுத்து வைத்த 160க்கும் மேற்பட்ட இந்தியர்கள்

3 mins read
தாறுமாறு ரன்னர்சின் வருடாந்தர ஆண்டிறுதி ஓட்ட நிகழ்ச்சியில் முதன்முறையாக ஐந்து கிலோமீட்டர் நடை
cbeee1db-970c-4cc7-b270-ce0003fa09ca
சகோதரத்துவத்தின் அடையாளமாக சமூகத்தை ஒன்றிணைத்தது ‘தாறுமாறு ரன்னர்ஸ்’ ஓட்டக்குழுவின் ஆண்டிறுதி ஓட்டம், நடை. - படம்: த.கவி
multi-img1 of 7

நீரிழிவு நோயையும் ஓரந்தள்ளக்கூடிய சக்தி ஓட்டத்திற்கு உள்ளது என்பதற்கு 45 வயது செந்தில் குமார் வாழும் உதாரணம்.

ரத்தத்தில் தனக்கு சர்க்கரை அதிகம் இருப்பதாகத் தெரிந்ததும் நீரிழிவு நோய் வந்துவிடாமல் தற்காத்துக்கொள்ள உறுதிபூண்ட திரு செந்தில், ஓட்டத்தை நாடினார்.

இந்தியர்களால் இந்தியர்களுக்காகவே 2017ல் தொடங்கப்பட்ட ‘தாறுமாறு ரன்னர்ஸ்’ எனும் ஓட்டக் குழுவில் உறுப்பினராகச் சேர்ந்து வாரந்தோறும் அவர் ஓடினார். இப்போது மருந்து உட்கொள்ளாமலே அவரது ரத்தச் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறது. அக்டோபர் மாதம் நியூயார்க்கில் 42 கி.மீ. நெடுந்தொலைவோட்டத்தையும் அவர் வெற்றிகரமாக முடித்தார்.

“தாறுமாறு ரன்னர்ஸ் மூலம் அவருக்கு நல்ல ஆதரவு கிடைக்கிறது,” என்றார் அவரது மனைவி சுகுணா தனகசுந்தரம், 48.

தன் மனைவி சுகுணா, மகன் (படத்தில் இல்லை), மகள் மதுசராவுடன் டிசம்பர் 28ஆம் தேதி தாறுமாறு ரன்னர்ஸ் ஏற்பாடு செய்த நடை/ஓட்டத்தில் பங்குபெற்ற திரு செந்தில் குமார்.
தன் மனைவி சுகுணா, மகன் (படத்தில் இல்லை), மகள் மதுசராவுடன் டிசம்பர் 28ஆம் தேதி தாறுமாறு ரன்னர்ஸ் ஏற்பாடு செய்த நடை/ஓட்டத்தில் பங்குபெற்ற திரு செந்தில் குமார். - படம்: ரவி சிங்காரம்

ஆண்டிறுதி ஓட்டம், 2025க்கு ஆயத்தம்

சனிக்கிழமை (டிசம்பர் 28) அதிகாலை 6.30 மணிக்கு மரீனா பே கிழக்கிற்குத் திரு செந்தில் குமார் தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார். அவரோடு தாறுமாறு ரன்னர்ஸ் குழுவினரும் பொதுமக்கள் பலரும் ஓடுவதற்கும் நடப்பதற்கும் ஆயத்தமாக ஒன்றுகூடினர்.

ஓட்டம் தொடங்குமுன் அனைவரையும் உற்சாகப்படுத்தும் ரிச்சர்ட் மோர்கன் சாமுவேல், தாறுமாறு ரன்னர்ஸ் குழுத் தலைவர்.
ஓட்டம் தொடங்குமுன் அனைவரையும் உற்சாகப்படுத்தும் ரிச்சர்ட் மோர்கன் சாமுவேல், தாறுமாறு ரன்னர்ஸ் குழுத் தலைவர். - படம்: த.கவி
இம்முறை முந்தைய ஆண்டுகளைவிட அதிகமானோர் வந்திருந்தனர். வழக்கமான 21 கி.மீ. ஓட்டத்துடன், முதன்முறையாக நடைபெற்ற 5 கி.மீ. நடை பொதுமக்களையும் ஈர்த்தது.
இம்முறை முந்தைய ஆண்டுகளைவிட அதிகமானோர் வந்திருந்தனர். வழக்கமான 21 கி.மீ. ஓட்டத்துடன், முதன்முறையாக நடைபெற்ற 5 கி.மீ. நடை பொதுமக்களையும் ஈர்த்தது. - படம்: த.கவி

ஒவ்வோர் ஆண்டிறுதியிலும், தாறுமாறு ரன்னர்ஸ் இத்தகைய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது வழக்கம். ஆனால் இம்முறை முந்தைய ஆண்டுகளைவிட அதிகமானோர் (ஏறக்குறைய 165 பேர்) வந்திருந்தனர். பலரும் விரும்பும் 21 கி.மீ. குழுவோட்டத்துடன் முதன்முறையாக நடைபெற்ற 5 கி.மீ. நடை பொதுமக்களையும் ஈர்த்தது. புதுமுகங்கள் ஏறக்குறைய 50 பேர் கலந்துகொண்டனர்.

காலை 7.20 மணிக்குக் குழு ஓட்டம் தொடங்கியது. ஒவ்வொரு குழுவிலும் மூன்று உறுப்பினர்கள், ஆளுக்கு 7 கி.மீ. ஓடினர். ஏற்பாட்டாளர்களே குழுக்களைத் தேர்ந்தெடுத்திருந்ததால் புதிய நண்பர்கள் கிடைக்கும் வாய்ப்பாகவும் இது அமைந்தது.

குழு ஓட்டம் தொடங்கியதைத் தொடர்ந்து 5 கி.மீ. நடையும் தொடங்கியது.

கரையோரப் பூந்தோட்டம், ‘சிங்கப்பூர் ஃப்ளையர்’ ராட்டினம் போன்றவற்றைப் பார்வையிட்டபடியே மக்கள் ஓடினர், நடந்தனர். மரீனா அணைக்கட்டில் திரும்பி, தொடங்கிய இடத்திலேயே ஓட்டத்தை முடித்தனர். பங்குபெற்ற அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, உடற்பயிற்சிச் சவால்கள் நடைபெற்றன. அவற்றிலும் பிஎம்ஐ எனும் உடல் எடைக் குறியீட்டுச் சவாலிலும் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஓட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற உடற்பயிற்சிச் சவாலில் ஐந்து நிமிடங்களுக்குமேல் தாக்குப்பிடித்த முழுநேரக் கடற்படை வீரர் ஸ்ரீ ஹரன், 29, ஆண்கள் பிரிவில் வென்றார்.
ஓட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற உடற்பயிற்சிச் சவாலில் ஐந்து நிமிடங்களுக்குமேல் தாக்குப்பிடித்த முழுநேரக் கடற்படை வீரர் ஸ்ரீ ஹரன், 29, ஆண்கள் பிரிவில் வென்றார். - படம்: த.கவி
உடற்பயிற்சிச் சவாலில் நாலரை நிமிடங்கள் தாக்குப்பிடித்து வென்ற சரண் பிரேமா, 46 (வலம்), தன் கணவருடன் நடையில் கலந்துகொண்டார். அவர் ஜும்பா நடனம், தேக்குவாண்டோ, யோகா போன்றவற்றிலும் தேர்ந்தவர்.
உடற்பயிற்சிச் சவாலில் நாலரை நிமிடங்கள் தாக்குப்பிடித்து வென்ற சரண் பிரேமா, 46 (வலம்), தன் கணவருடன் நடையில் கலந்துகொண்டார். அவர் ஜும்பா நடனம், தேக்குவாண்டோ, யோகா போன்றவற்றிலும் தேர்ந்தவர். - படம்: த.கவி
நடையில் பங்கேற்றார் சிங்கப்பூரின் நடைப்பந்தய வீரரும் ‘ஜஸ்ட் வாக் லா’ நடைப்பந்தயக் குழுவின் தோற்றுநருமான ரா.சுப்பிரமணியம் (வலம்).
நடையில் பங்கேற்றார் சிங்கப்பூரின் நடைப்பந்தய வீரரும் ‘ஜஸ்ட் வாக் லா’ நடைப்பந்தயக் குழுவின் தோற்றுநருமான ரா.சுப்பிரமணியம் (வலம்). - படம்: த.கவி
50 ‘பு‌ஷ்-அப்ஸ்’ செய்து உடற்பயிற்சி சவாலின் மற்றொரு பிரிவில் வென்ற சந்தினி, தாறுமாறு ரன்னர்ஸ் இணை நிறுவனர் ரமே‌ஷ் செல்வராஜிடமிருந்து பரிசு பெறுகிறார்.
50 ‘பு‌ஷ்-அப்ஸ்’ செய்து உடற்பயிற்சி சவாலின் மற்றொரு பிரிவில் வென்ற சந்தினி, தாறுமாறு ரன்னர்ஸ் இணை நிறுவனர் ரமே‌ஷ் செல்வராஜிடமிருந்து பரிசு பெறுகிறார். - படம்: த.கவி

ஓட்டத்தில் நாட்டம்கொண்ட இரட்டையர்கள்

ஓட்டம் தொடங்குமுன் கைகளைத் தூக்கி உடற்பயிற்சி செய்யும் இரட்டையர்கள் ராமன், லெட்சுமணன் கருப்பையா (நடுவில், வலம்). அவர்களுடன், ஓட்டம் மூலம் உடல் எடையைக் குறைத்த சுபா‌ஷினி நாகராஜன், 44 (முன்வரிசை இடம்).
ஓட்டம் தொடங்குமுன் கைகளைத் தூக்கி உடற்பயிற்சி செய்யும் இரட்டையர்கள் ராமன், லெட்சுமணன் கருப்பையா (நடுவில், வலம்). அவர்களுடன், ஓட்டம் மூலம் உடல் எடையைக் குறைத்த சுபா‌ஷினி நாகராஜன், 44 (முன்வரிசை இடம்). - படம்: த.கவி

ராணுவப் பின்னணி கொண்ட இரட்டையர்கள் ராமன், லெட்சுமணன் கருப்பையா, 62, இருவரும் அவ்வப்போது தாறுமாறு ரன்னர்ஸ் ஓட்டங்களில் கலந்துகொள்கின்றனர். தனிப்பட்ட முறையிலும் ஓடுகின்றனர். “உடற்கட்டோடு இருப்பதே எங்கள் முக்கியக் குறிக்கோள்,” என்றார் ராமன்.

‘7 மாதங்களில் 7 கிலோகிராம் எடையைக் குறைத்தேன்’

கொவிட்-19 கிருமிப்பரவல் காலத்தில் உடல் எடை ஏறியதால், படிகளில் ஏறக்கூடச் சிரமப்பட்டார் ‘ஃபோர்டிஸ்’ கட்டுமான நிறுவனத்தைச் சார்ந்த 44 வயது சுபா‌ஷினி நாகராஜன். அப்போது அவருடைய சக ஊழியர் குரு சங்கரதாஸ், அந்நிறுவனத்தின் ‘உடற்பயிற்சி நண்பர்கள்’ திட்டத்திலும் பின்பு தாறுமாறு ரன்னர்சிலும் சேர சுபாஷினியை ஊக்குவித்தார்.

முன்பு 200மீட்டர்கூட ஓடச் சிரமப்பட்டேன். இன்று என்னால் 10 கி.மீ.கூட ஓட முடிகிறது.
சுபா‌ஷினி நாகராஜன், 44.

வாரத்திற்கு இருமுறை உடற்பயிற்சிக்கூடப் பயிற்சி செய்து, அண்மையில் ஓடவும் தொடங்கிய அவர் ஏழு மாதங்களில் ஏழு கிலோகிராம் எடையைக் குறைத்தார். ‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’ நெடுந்தொலைவோட்டம் 2024ல் 10 கி.மீ. ஓடவும் செய்தார். “அடுத்த ஆண்டு மேலும் சில கிலோகிராம் எடையைக் குறைக்கவுள்ளேன்,” என்றார் சுபா‌ஷினி.

சனிக்கிழமை ஓட்டத்தில், ‘ஃபோர்டிஸ்’ல் பணியாற்றும் மற்றவர்களும் இணைந்து சிறப்புசேர்த்தனர்.

அனைவரும் சேரலாம்; ஏராள வாய்ப்புகள்

“சனிக்கிழமைகளில் காலை, 5 கி.மீ. போன்ற குறுகிய தொலைவிற்கு ஓடுகிறோம். ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் தொலைவு ஓடுகிறோம். அவ்வப்போது வாரநாள்களிலும் மாலையில் பயிற்சி இருக்கும். குடும்பங்களும் பயிற்சிகளில் பங்கேற்கலாம்,” என்றார் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் புவனேஸ்வரி காண்டீபன், 44.

வெளிநாடுகளுக்குச் சென்று ஓடும் வாய்ப்புகளையும் தாறுமாறு ரன்னர்ஸ் வழங்குகிறது. இவ்வாண்டு ஜூன் மாதம், ஐந்து சிறுவர்கள் உட்பட, ஏறக்குறைய 25 பேர் ஃபுக்கெட் ஓட்டத்திற்கு சென்றனர்.

ஃபுக்கெட் நெடுஞ்தொலைவோட்டத்தில் தாறுமாறு ரன்னர்ஸ்.
ஃபுக்கெட் நெடுஞ்தொலைவோட்டத்தில் தாறுமாறு ரன்னர்ஸ். - படம்: தாறுமாறு ரன்னர்ஸ்
சென்னையில் 2023ல் ஓடிய தாறுமாறு ரன்னர்ஸ்.
சென்னையில் 2023ல் ஓடிய தாறுமாறு ரன்னர்ஸ். - படம்: தாறுமாறு ரன்னர்ஸ்

அடுத்த டிசம்பரில் அங்கோர் வாட், கோவா அல்லது வியட்னாமில் நடக்கும் ஓட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 2026 லண்டன் நெடுந்தொலைவோட்டத்தில் பங்கேற்று, 42 கி.மீ. ஓடுவதற்குப் பெண் உறுப்பினர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

தாறுமாறு ரன்னர்சில் சேர விரும்புவோர் அவர்களின் சமூக ஊடகத்தளங்கள் வாயிலாக (ஃபேஸ்புக்கில் thaarumaaru runners, இன்ஸ்டகிராமில் @thaarumaaru.runners) இணையலாம்.

குறிப்புச் சொற்கள்