உமறுப்புலவர் கல்வி உதவி அறங்காவல் நிதியை ஐந்து மாணவர்கள் பெற்றுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்விக் கடனுதவியும் உபகாரச் சம்பளமும் வழங்கப்படும். இரு பட்டப்படிப்பு மாணவர்களுக்குத் தலா $3,000, இரு பட்டயப்படிப்பு மாணவர்களுக்குத் தலா $2,000யுடன் வட்டியில்லாக் கடன், ஒரு தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவருக்கு $1,000 உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டன.
இந்நிதியிலிருந்து ஆண்டுதோறும் சிண்டாவிற்கு $5,000அறங்காவல் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிதியின் காசோலையை ஜூன் 11ஆம் தேதியன்று சிண்டாவின் உள்ளரங்கில் நடைபெற்ற நிகழ்வில் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு பெற்றுக்கொண்டார்.
இந்நிதியின் மூலம் மூன்றாம் முறையாக பயனடைந்துள்ள பட்டப்படிப்பு மாணவர் தீபன் ரமணி, 36, “பொருளியல் சிரமங்களுக்கு இடையில் பட்டயக்கல்விக்காக உமறுப்புலவர் கல்வி உதவித்தொகையை நாடினேன். தொடர்ந்து பட்டப்படிப்பிற்கும் மேற்படிப்பிற்கும் இவ்வட்டியில்லாக் கல்விக்கடன் உதவுகிறது,” என்று கூறினார்.
உமறுப்புலவர் அறங்காவல் நிதிக் குழுவின் தலைவர் விவேகானந்தன் கூறுகையில், “இந்த உதவித்தொகையால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இந்த ஆண்டு $17,100 வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.
குழுவின் கௌரவச் செயலாளர் சைய்யிது அப்துல்லாஹ், 75, “இவ்வாண்டு விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனினும், தொடர்ந்து இந்த உதவித் தொகை மாணவர்களைச் சென்றடைய தொடர்ந்து செயல்படுவோம்,” என்று கூறினார்.