நீரிழிவு நோயும் பொருளியல் சுமையும்

“ஏறத்தாழ 20 ஆண்டுகளாக நீரிழிவு நோயுடன் வாழ்கிறேன். அது உடல் உபாதை என்பதைவிட, அதனால் செலவதிகம் என்பதுதான் உண்மை,” என்கிறார் சிங்கப்பூரில் ஜவுளிக்கடை உரிமையாளராக இருக்கும் திரு ரஃபிக் ரஹ்மான்.

சராசரி சிங்கப்பூரரைப் போல அல்லாமல், உணவங்காடி நிலைய உணவுவகைகளைத் தவிர்த்து நீரிழிவு நோய்க்குரிய உணவுமுறையைப் பின்பற்றுவதால், பிரத்தியேக உணவங்காடிகளுக்குச் செல்ல வேண்டி வரும். அவை பெரும்பாலும் விலையுயர்ந்ததாகவே இருக்கும் என்கிறார் அவர்.

மேலும், தனது உடல்நிலைக்குத் துணை உணவுவகைகளும் மருந்துகளும் தேவைப்படுவதால் அதற்கெனக் குறைந்தது மாதம் 300 முதல் 400 வெள்ளி வரை செலவாகிறது எனக் குறிப்பிடுகிறார்.

நீரிழிவு நோய் இருப்பவருக்குப் பல பக்கவிளைவுகளும் உடல் கோளாறுகளும் ஏற்படுவதாக திரு ரஃபிக் பகிர்ந்துகொண்டார்.

நீரிழிவு நோய் காரணமாகத் தமக்கு ஏற்பட்ட பிரச்சினைக்காக அண்மையில் அறுவை சிகிச்சை நடந்ததைக் குறிப்பிட்ட அவர், “மருந்துகளுக்கு மானியம் வழங்கப்பட்டாலும் சேர்ந்துவரும் பல செலவுகளை நாமே ஏற்க வேண்டியுள்ளது,” என்கிறார்.

நீரிழிவு நோய் நோயாளிகளுக்கான காப்புறுதித் திட்டங்கள் கடும் நிபந்தனைகளோடு இருப்பதால் அதிகம் உதவுவதில்லை என்று சுட்டிக் காட்டினார் திரு ரஃபிக்.

சிங்கப்பூரில் பத்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கும் நிலையில், அவர்களில் பெரும்பாலானோரின் குரலாகவே ஒலிக்கிறார் திரு. ரஃபிக்.

நீரிழிவு நோய் உலகளாவிய பொருளியல் சுமையை ஏற்படுத்துகின்றதா என்பது குறித்த ஆய்வு பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது.

அனைத்துலக அளவில் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை 2050ல் 529 மில்லியனிலிருந்து 1.3 பில்லியனுக்கு உயரும் என்று ‘ஹெல்த் மேட்ரிக்ஸ்’ கடந்த ஜூன் மாதம் அறிக்கை வெளியிட்டது.

கணையம் என்பது ஒரு நீண்ட மற்றும் தட்டையான சுரப்பி ஆகும். இது நம் மேல் வயிற்றில் வயிற்றுக்குப் பின்னால் அமைந்துள்ளது. கணையம் செரிமானத்திற்கு உதவும் என்சைம்களை உற்பத்தி செய்கிறது மற்றும் நம் உடல் சர்க்கரையை (குளுக்கோஸ்) செயலாக்கும் முறையை ஒழுங்குபடுத்த உதவும் ஹார்மோன்களுக்கும் உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகளில் 96 விழுக்காட்டினர், காலப்போக்கில் கணையம் இன்சுலின் எனும் சுரப்பியை உருவாக்குவது குறைவதால் ஏற்படும் இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளாக உள்ளனர்.

மீதமுள்ள 4 விழுக்காட்டினர் உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலில் ஏற்படும் குறைபாட்டால் கணையம் இன்சுலினை உருவாக்காமல் போகும் முதல் வகை நீரிழிவு நோயாளிகளாகவும் உள்ளனர்.

நீரிழிவு நோய்க்கான காரணிகள், கட்டுப்படுத்தும் வழிமுறைகள், மாற்று மருத்துவ ஆலோசனைகள் எனப் பல அம்சங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே நீரிழிவு நோய் ஏற்படுத்தும் பொருளியல் சுமை அதிகம் பேசப்படாத ஒன்றாக உள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் சோ சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளியும் இணைந்து சிங்கப்பூரில் உள்ள 20 முதல் 69 வயதுடைய ஊழியர்களிடையே நடத்திய ஆய்வின் அடிப்படையில், 2050ஆம் ஆண்டில் தற்போதுள்ள நிலையைவிட நீரிழிவு நோயின் மொத்த பொருளாதாரச் செலவுகள் 1,867 மில்லியன் அமெரிக்க டாலராக (S$2501 மி.) உயருமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையின்படி மொத்த வருடாந்தரச் செலவில் ஏறத்தாழ 11 விழுக்காடு, நீரிழிவு நோய்க்கெனச் செலவிடப்படுகிறது.

நீரிழிவு நோய் இல்லாத ஒருவருடன் ஒப்பிடுகையில் நீரிழிவு நோயுள்ளவருக்கு ஏற்படும் செலவு, இரண்டு முதல் இரண்டரை மடங்கு அதிகம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பொருளியல் பாதிப்பு ஏற்படுவது எப்படி... 

நீரிழிவு நோய் தனிநபருக்கும் அவர் வேலைபார்க்கும் நிறுவனத்திற்கும் பொருளியல் சுமையைக் கூட்டுகிறது. படம்: இணையம்

உணவில் தொடங்கி மருத்துவம் வரை பல்வேறு தனிமனிதச் செலவுகளை நீரிழிவு நோயாளி ஒருவர் கையாள வேண்டியுள்ளது.

ஒரு நீரிழிவு நோயாளி, மற்றவர்களைக் காட்டிலும் தமது காப்புறுதிக் கட்டணத்துக்குக் குறைந்தது 20 விழுக்காடு அதிகமாகச் செலுத்த வேண்டியுள்ளது.

சாதாரண கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசிக்கு மாற்றாக நார்ச்சத்துள்ள உணவுவகைகளை வாங்குவது, குறைவான சர்க்கரையளவு கொண்ட உணவுப்பொருள்கள், கொழுப்பு அதிகமில்லாத உணவுப்பொருள்கள் போன்றவற்றை வாங்கவும் செலவதிகம்.

மருந்து மாத்திரைகள், இன்சுலின் பொருள்கள், சர்க்கரை கண்டறியும் கருவி உள்பட இன்ன பிற மருத்துவச் சாதனங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிய தேவை உள்ளது.

அதன் பின்னர் சில மாதங்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டிய பரிசோதனைகள், மருத்துவமனை சென்று வரும் செலவுகள் ஆகியவற்றையும் சுமக்க வேண்டி உள்ளது.

மேலும், துணை ஊட்டச்சத்து உணவுவகைகள், சிறப்புக் காலணிகள், உடற்பயிற்சி நிபுணர், உணவுமுறை நிபுணர் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

மேற்குறிப்பிட்ட நேரடிச் செலவுகளைத் தவிர மறைமுகமான பொருளியல் பாதிப்பிற்கும் நீரிழிவு நோய் முக்கியக் காரணியாக அமைகிறது.

நீரிழிவு நோயாளி ஒருவர் வேலை செல்லும் ஊழியராக இருந்தால் களைப்பால் நிறுவனத்திற்கு அதிக உற்பத்தித்திறனுடன் இயங்கவும் முடியாது.

நோயுற்று இருப்பதாலும் மருத்துவரைச் சந்திக்க வேண்டியுள்ளதாலும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளதாலும் மருத்துவ விடுப்பு எடுக்கும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.

இவையாவும் தனிநபருக்கும் அவர் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கும் பொருளியல் சுமையைக் கூட்டுகின்றன.

முக்கியமாக, நீரிழிவு நோயானது முன்கூட்டியே ஓய்வுபெறும் பணியாளர்களின் எண்ணிக்கையைப் பெருமளவு கூட்டியுள்ளதாகத் தெரிகிறது.

எனவே, மறைமுகமாக ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தித் திறன் பாதிப்புக்குள்ளாகிறது.

சிங்கப்பூரில் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் செலவு... 

சிங்கப்பூரர்கள் ஆரம்பகட்ட நோய் கண்டறியும் சோதனைகளைச் செய்துகொள்ளும்போது அவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

நோய் வீரியம், வீட்டின் மொத்த வருமானம் எனப் பல அம்சங்களைக் கருத்தில் கொண்டு மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க மானியம் அளிக்கப்படுகிறது.

எனினும், பொதுவாகத் தனியார் மருத்துவமனைகளில் ஒருவரிடம் நீரிழிவு நோயைக் கண்டறிய $50 முதல் $80 வரை செலவாகிறது.

நீரிழிவு நோய் கண்டறியப்பட்டால், ஏறத்தாழ ஆயுள் முழுவதும் மருந்துகள் உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். நீரிழிவு நோய்க்கான மருந்துகள், நோய் வீரியத்தைப் பொறுத்து ஒரு மாத்திரைக்கு 50 காசு முதல் 11.95 வெள்ளி வரையிலான விலையில் விற்கப்படுகிறது.

சர்க்கரை அளவு கூடியுள்ள நோயாளிகள் பயன்படுத்தும் ஊசி, பேனா வகைகள் என இன்சுலின் மருந்துகள், கருவிகளின் விலை $7.69 முதல் $119.85 வரை உள்ளது.

மேலும், காலப்போக்கில் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் அதிகப்படியான செலவுகள், அவரது ஓய்வுகால நிதியைக் குறைத்து பொருளியல் சுமையைக் கூட்டுவதாகத் தெரிகிறது.

இதோடு அல்லாமல், நீரிழிவு நோயானது காலப்போக்கில் உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்புகளில் தொடங்கி பல்வேறு நோய்களுக்கும் இட்டுச் செல்கிறது.

ஆறாத புண்கள், நீரிழிவு நோய் தீவிரமடைந்தால் உடல் பாகத்தைத் துண்டித்தல் எனச் சுமைகளைக் கூட்டலாம்.

இவை பொருளியல் சுமையோடு சேர்த்து உளவியல்ரீதியான சுமையையும் ஒருவரிடத்தில் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

மருத்துவ நிபுணர்கள் கருத்து...

இதுகுறித்து தேக்கா மருத்துவ நிலைய மருத்துவர் திரு துரைராஜ் சுப்பிரமணியம் கூறுகையில், “அதிகச் செலவுகளை ஏற்படுத்தும் ஒரு நோய் இந்தச் சர்க்கரை நோய். பொதுவாக நோய் கண்டறியப்பட்டவுடன் மருந்துகளும் பரிசோதனைகளும் அவ்வளவு விலை அதிகம் அல்ல. இருப்பினும், நீரிழிவு நோயின் சிக்கல்கள் வேதனையானவை என்பதோடு பொருளியல் சுமையை நாளடைவில் ஏற்படுத்துபவை,” என்றார்.

கெடுவாய்ப்பாக, தென்னிந்திய வேர்களைக் கொண்டவர்கள் இங்கு நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

எளிமையான வாழ்க்கை, உடல் உழைப்பு, பதப்படுத்தப்படாத உணவு ஆகியவற்றை விடுத்து அதற்கு நேர்மாறாகச் செயல்படுவதால் இந்நோய்க்கு பலியாகிறார்கள். நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட நோய்களை முன்கூட்டியே கண்டறிய சரியான சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொண்டு உடல், மன, பொருளியல் சுமைகளைக் குறைக்கலாம் என்கிறார் மருத்துவர் துரைராஜ்.

சிங்கப்பூரில் பணியாற்றும் மற்றொரு மருத்துவரான திரு. சுனில் குமார் ஜோசஃப் கூறுகையில், ஒருவரின் தமனிகள் (arteries), நரம்புகள், ரத்த நுண்குழாய்கள் (capillaries) ஆகியவற்றை நீரிழிவு நோய் பாதிப்பதால் ரத்தக்குழாய் பாதிப்புக்கும் முக்கியக் காரணியாகிறது.

இவை மூளை முதல் பாதம் வரை பாதிப்பதால், தொடர் சிக்கல்கள் அளித்துப் பெரும் பொருளியல் சுமையை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்றார்.

மேலும், “நீரிழிவு ஒரு பரம்பரை நோய். நமக்கு முந்தைய தலைமுறைகளில் யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பின், நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்,” என்றார் மருத்துவர் சுனில்.

அறிகுறிகள் உணராத வகையில் பல நோய்கள் உடலை வலுவிழக்கச் செய்வதால் நீரிழிவு நோய் பல துணை நோய்களை இறுதிக்கட்டம் வரை அறியாமல் செய்துவிடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கட்டுப்பாடான வாழ்க்கைமுறையே இதற்கான தீர்வு என்று குறிப்பிட்ட அவர், ஒரு சமூகமாகச் சேர்ந்து செயல்பட்டால் இதற்குத் தீர்வு காண முடியும் என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!