துடிப்பான மூப்படைதலுக்கு சிறந்த சான்றாக வாரந்தோறும் ஞாயிறுகளில் மெதுநடை, மெதுவோட்டம் செய்துவருகின்றனர் ராடின் மாஸ் இந்தியர் நற்பணிச் செயற்குழுவினரும் (ஐஏஈசி) ராடின் மாஸ் குடியிருப்பாளர்களும்.
69 வயது திரு கோ. பாலச்சந்திரன் வழிநடத்தும் இந்த ஆர்வக் குழுவில் வாரந்தோறும் சுமார் பத்து பேர் வழக்கமாக நடக்கின்றனர். அவர்களில் மூவர் 70 வயதுக்கும் மேற்பட்டோர்.
சுமார் 20 ஆண்டுகளாக ராடின் மாஸ் ஐஏஈசி தலைவராக இருந்துவந்த திரு பாலச்சந்திரன், 2018ல் இக்குழுவைத் தொடங்கினார்.
அதற்கு முன்பு, விளையாட்டுகளிலும் மெதுநடையிலும் கொள்ளைப் பிரியம் கொண்ட திரு பாலச்சந்திரன், தாமாகவே நடப்பது வழக்கம்.
கொவிட்-19 தொற்றுக்காலத்தில், வேலைக்குச் செல்வதற்குமுன் தினசரி காலை 7 முதல் 9 மணி வரை நடப்பார்.
எனினும், தன் நண்பர்களும் சுற்றத்தாரும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இக்குழுவைத் தொடங்கினார்.
குழுவில் பெரும்பாலோர் 20-30 ஆண்டுகளாக ராடின் மாஸ் வட்டாரத்தில் தங்கி, ஐஏஈசியில் சேவையாற்றிவந்துள்ளனர்.
ராடின் மாஸை சுற்றி, ‘ஹெண்டர்சன் அலைகள்’, ‘மவுண்ட் ஃபேபர்’, ‘லாப்ரடார் பார்க்’, ‘பாலாவான்’ கடல் போன்ற இடங்களில் நடந்துவந்துள்ளனர் இக்குழுவினர்.
தொடர்புடைய செய்திகள்
மக்கள் கழக நற்பணிச் செயற்குழுவினரையும் மாதத்தில் ஓரிரு முறை மெதுநடைகளில் வழிநடத்திச் சென்றுள்ளார் திரு பாலச்சந்திரன்.
‘மெக்ரிட்சி’, ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரை, என சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளுக்கும் சென்றுள்ளனர்.
பக்கவாதம் வந்தபின்பும் நான்கு ஆண்டுகளாக நடந்துவருகிறார் திரு சுப்பிரமணியம், 77.
“வாரத்திற்கு மூன்று நாள்கள், 3-4 கிலோ மீட்டர் நடப்பேன், அல்லது அடுக்குமாடி கீழ்த்தளத்திலேயே உடற்பயிற்சி செய்வேன்,” என்கிறார் அவர்.
“காலை ஏழு மணிக்கு ஒன்றுகூடி ஒரு மணி நேரம் மெதுநடை சென்று திரும்பி, காப்பிக் கடையில் பானமருந்தியபடி கலந்துரையாடுவோம்,” என்கிறார் திரு பழனிவேலு, 51.
இவர் வாரத்திற்குக் குறைந்தது 20 கிலோ மீட்டர் ஓட முயற்சிப்பார்.

