இந்த ஆண்டு தீபாவளியைப் பறவைப் பூங்காவில் கொண்டாடினர் ‘வெஸ்ட்லைட் ஜாலான் பாப்பானின்’ தங்குவிடுதியைச் சார்ந்த 150 வெளிநாட்டு ஊழியர்கள்.
ரட்சணிய சேனையின் தமிழ் ரட்சிப்புத் திருச்சபை இதற்கு ஏற்பாடு செய்தது.
தீபாவளி நாளில் பிற்பகல் 2 மணிக்கு அவர்களைப் பறவைப் பூங்காவிற்கு அழைத்துச் சென்றதோடு, மாலையில் ஒரு தீபாவளிக் கொண்டாட்டத்தையும் அது நடத்தியது.
அதிர்ஷ்டக் குலுக்கல் முறையில் 15 பரிசுகளும் வழங்கப்பட்டன.
ஒவ்வோர் ஊழியருக்கும் சாப்பாடு, பரிசுப்பை, ‘மெக்டோனல்ட்ஸ்’ தீபாவளிப் பற்றுச்சீட்டு ஆகியவை வழங்கப்பட்டன.
“நிகழ்ச்சிகள் நன்றாக இருந்தன. முதன்முறையாகப் பறவை பூங்காவிற்குச் சென்றேன். நண்பர்களுடன், நல்ல உணவுடன் பொழுதைக் கழித்தது மனநிறைவாக இருந்தது,” என்றார் கட்டடத் துறையில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர் குழந்தைவேலு, 33.
“இதற்கு முன்பு பறவைப் பூங்கா என ஒன்று இருப்பதே எனக்குத் தெரியாது. நிகழ்ச்சி, உணவு அனைத்தும் மிகவும் நன்றாக இருந்தன. இதுபோன்ற அடுத்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வேன்,” என்றார் கட்டடத் துறையைச் சார்ந்த கிருஷ்ணமூர்த்தி, 39.
“எங்களை இவ்வாறு அழைத்துச் சென்றிருக்காவிட்டால் தீபாவளி நாளிலும் பொழுது எப்போதும்போல தனிச்சிறப்பில்லாமல் கழிந்திருக்கும்,” என்றார் பங்கேற்ற மற்றொருவர்.
டிசம்பர் 17ஆம் தேதி, மாலை 6 மணி முதல் 9 மணி வரை விளையாட்டுகள், பரிசுகள் கொண்ட கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளது ரட்சணிய சேனையின் தமிழ் ரட்சிப்புத் திருச்சபை.
முன்பதிவுவழி 300 முதல் 500 வெளிநாட்டு ஊழியர்கள் இதில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.