சிங்கப்பூரில் உள்ள இலங்கைத் தூதரகம் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 18) மாலை தீபாவளிக் கொண்டாட்டத்தை நடத்தியது.
அதில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அதிகாரிகளும் சிங்கப்பூரிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் பிரதிநிதிகளும் இலங்கை வம்சாவளியினர் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடன, இசை நிகழ்வுகள் கண், செவிக்கு இனிய விருந்தாக அமைந்தன. நிகழ்ச்சி முடிவில் அறுசுவை உணவு விருந்தும் இடம்பெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற நியமன உறுப்பினர் நீல் பரேக் நிமில் ரஜினிகான்ட் வருகையளித்தார்.
லிட்டில் இந்தியா ஒளியூட்டு விழாவிலும் சாலை அணிவகுப்பிலும் இலங்கைப் பண்பாட்டுக் குழுக்களின் பங்கேற்பைப் பாராட்டிய அவர், இலங்கை-சிங்கப்பூர் வணிகங்களுக்கு இடையே பந்தத்தை வலுவாக்க சிங்கப்பூர் இந்தியர் வர்த்தகத் தொழிற்சபை மேற்கொண்டுவரும் முயற்சிகளைச் சுட்டினார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பயணங்களுக்கும் தென்கிழக்காசியப் பகுதியின் கூட்டு முயற்சிகளுக்கும் இவை துணைபுரிந்து வருவதாகவும் அவர் கூறினார்.
‘அப்சராஸ் ஆர்ட்ஸ்’ குழுவின் நடனக் கலைஞர் மோகனப்பிரியன் தவராஜா ‘ஸ்கந்த ரசம்’ எனும் நடன அங்கத்தை வழங்கினார். நவரசத்தின் ஆறு ரசங்களான வீரம், கருணை, சிரிப்பு, ரெளத்திரம், சிங்காரம், அற்புதத்தை இந்நடனம் வெளிக்கொணர்ந்தது.
‘அப்சராஸ் ஆர்ட்ஸ்’ நடனமணிகள் பூஜிதா ரகுனாத், கோமதி ரவீந்திரன் இணைந்து நாட்டியப் படைப்பையும் வழங்கினர்.
‘தத்வா புரொடக்ஷன்ஸ்’, ஸ்ரீ அரசகேசரி சிவன் ஆலய நடனமணிகளும் அசத்தினர்.
ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலய மாணவர்கள், நடனத்தோடு இசையையும் வழங்கி மகிழ்வித்தனர். திஸ்ஸநாயக்கவின் புகழ்பெற்ற இலங்கைப் பாடலுடன் நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது.
“நீண்ட நாள்களுக்குப் பிறகு நடந்த இந்நிகழ்ச்சி, நம் இலங்கைக் கலாசாரத் தொடர்புகளை வலுப்படுத்தியதில் பெருமை கொள்கிறோம்,” என்றார் சிங்கப்பூருக்கான இலங்கையின் தற்காலிகத் தூதர் அஹமட் றாசி.
“இந்த முக்கிய நிகழ்ச்சியில் நடனமாடியது எங்களுக்குக் கிடைத்த பேறு,” என கலைஞர்களின் சார்பில் நன்றி தெரிவித்தனர் ‘தத்வா புரொடக்ஷன்ஸ்’ நடனமணிகளான ஷேலி, நாட்டாஷா.