கலையும் தொழில்நுட்பமும் இணைந்த ஹவ்காங் தீபாவளிக் கொண்டாட்டம் ஹவ்காங் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவின் ஏற்பாட்டில் நவம்பர் 25ஆம் தேதி அரங்கேறியது.
ஆடல், பாடல், அதிர்ஷ்டக் குலுக்கல், அறுசுவை இரவு உணவு என 300 பார்வையாளர்களை மகிழ்விக்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக படைக்கப்பட்டன.
செயற்கை நுண்ணறிவு நெறியாளர் முத்தமிழ்ச்செல்வி நிகழ்ச்சியை நவீன முறையில் வழிநடத்தினார். அவர் அழகு தமிழில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இந்த அங்கம் புத்தாக்க இந்தியக் கலையகத்தின் தயாரிப்பில் நடைபெற்றது.
முத்தமிழ்ச்செல்வியுடன் ஒன்றிணைந்து சி.குணசேகரன், அமராவதி இருவரும் நிகழ்ச்சியை வழிநடத்தினர்.
சிங்கப்பூர்க் கலைஞர்கள் சுவாமிநாதன் ராஜா, தாட்ஷாயினி, தன்ஷிகா, தேஜா ஆகியோர் காதுக்கினிய பாடல்களைக் கணினி இசையில் பாடினர்.
கண்கவர் நடனங்களை வர்தினி சுப்ரமணியம், ஜெனீஃபர் பீட்டர், ஷைலு வின்சண்ட், அதுல்யா, மாதவி தேவு ஆகியோர் தங்கள் குழுவினரோடு படைத்தனர்.
ஹவ்காங் அடித்தள ஆலோசகர் லீ ஹோங் சுவாங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட இசையோடு திரு லீ, ‘பொன்னி நதி’ தமிழ்ப் பாடல் வரிகளைக் கற்றுக்கொண்டு மேடையில் பாடி மகிழ்ந்தார்.
சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் பதிவு
நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக 35,000 ‘பிஸ்டாச்சியோ’ கடலை ஓடுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ரங்கோலி, சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.
4.7 மீட்டர் அகலம் 2.7 மீட்டர் உயரம் கொண்ட ரங்கோலி, ‘வண்ணங்களில் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு’ என்ற கருவில் உருவாக்கப்பட்டது.
“தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, கலைஞர்களின் படைப்பாற்றலில் இரண்டறக் கலந்து, கண்கவர் வண்ணத்தில் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன,” என்றனர் ஹவ்காங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஷிவசங்கரி மோகன், ராகவன்.
செயற்கை நுண்ணறிவுப் படைப்பாளரின் தெளிவான தமிழ் அறிவிப்புகள் தன்னைக் கவர்ந்ததாகப் பார்வையாளர் திருமதி அருஞ்செல்வி புகழேந்தி சொன்னார்.
பல இன மக்கள் சேர்ந்து சிறப்பித்த நிகழ்ச்சி, தீபாவளிக் கொண்டாட்ட உணர்வையும் ஊட்டியது.