இந்தியாவின் மறைந்த முன்னாள் அதிபர் டாக்டர் அப்துல் கலாமின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதை இலட்சியமாகக் கொண்டுள்ளது அப்துல் கலாம் இலட்சியக் கழகம்.
அந்த வகையில், சாலைகளைத் தூய்மைப்படுத்தல், ரத்த தானம், வசதிகுறைந்த மாணவர்களுக்கு உதவி, சாலைகளில் மரம் நடுதல் போன்ற சமூக சேவைகளை அவ்வப்போது செய்துவருகிறது இந்த அமைப்பு.
கடந்த சில ஆண்டுகளாக லிட்டில் இந்தியா பகுதியில் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்ட இக்கழகம், கடந்த ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி காலை ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவைச் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டது.
கழகத்தின் தலைவர் அமீரலி, காலை 8 மணியளவில் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பேசினார். வசிக்கும் இடத்தைத் தூய்மை செய்வது டாக்டர் அப்துல் கலாமுக்கு மிகவும் விருப்பமான சமூகத்தொண்டு என்று கூறி, இதற்குப் பதிவு செய்த ஏறக்குறைய 50 தொண்டூழியர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை அவர் தெரிவித்துக்கொண்டார்
அடுத்து பேசிய கழகத்தின் துணைத்தலைவர் ஜோதி மாணிக்கம், தவறு செய்தவர்களை மன்னிப்பதும், அவர்களே நாணும் வகையில் நன்னயம் செய்வதும் டாக்டர் கலாமின் கொள்கைகள் என்பதைச் சுட்டி, ஆங்காங்கே குப்பை வீசுவோரைக் கடிந்துகொள்வதற்குப் பதிலாக, அதைச் சுத்தப்படுத்தும் பணியில் அவர்களை ஈடுபடுத்தலாம் என்றார்.
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கழகச் செயலாளர் ஜான் ராமமூர்த்தி, தொண்டூழியர்களுக்கான உணவு, பான செலவுகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
சரியாக 9 மணிக்குத் தொடங்கிய துப்புரவுப் பணி, முற்பகல் 11.30 மணிக்கு நிறைவடைந்தது. கிட்டத்தட்ட 60 நெகிழி வாளிகள் நிரம்புமளவு குப்பைகளைத் தொண்டூழியர்கள் அகற்றினர்.