சிங்கப்பூரின் ரத்த வங்கித் தேவைகளை நிறைவுசெய்ய, ஜனவரி 28ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் பகல் 4 மணி வரை தமிழ் முஸ்லிம் ஜமாஅத் ஏற்பாட்டில், சுல்தான் பள்ளிவாசல் ஆதரவில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
சுல்தான் பள்ளிவாசலில் நடந்த இம்முகாமிற்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கமும் சுகாதார அறிவியல் ஆணையமும் ஆதரவு அளித்தன.
சிங்கப்பூரர்கள், வெளிநாட்டு ஊழியர்கள் என மொத்தம் 255 பேர் முகாமுக்காகப் பதிவுசெய்திருந்தனர். ரத்த தானத் தினத்தன்று வந்த 157 பேரில் 87 பேர் வெற்றிகரமாக ரத்த தானம் அளித்தனர்.
“இதன்மூலம், நாங்கள் பலதரப்பட்ட சிங்கப்பூர்வாசிகளாக பிறரது வாழ்வில் பங்களிப்பதற்கு வாய்ப்பளித்தோம்,” என்றார் தமிழ் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் வாவு ஷாஹுல் ஹமீத்.
“பல இன மக்கள், இளையர் முதல் முதியோர் வரை, ரத்த தானம் கொடுக்க முன்வந்தது மிகுந்த பாராட்டுக்குரியது,” என்றனர் திட்டத் தலைவர் ஷாஹுல் ஹமீது, திட்ட மேலாளர் கபீர் மரைக்காயர்.
“சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் பங்குபெற்றது எங்களுக்கு மனநிறைவு அளித்தது,” என்றார் தமிழ் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலர் முகம்மது கவுஸ்.
சிங்கப்பூரில் தினசரி ஒரு மணி நேரத்திற்கு 15 ‘யூனிட்’ ரத்தம், ஒரு நாளுக்கு 400 ‘யூனிட்’ ரத்தம் தேவைப்படுவதாகக் கூறுகிறது சுகாதார அறிவியல் ஆணையத்தின் இணையத்தளம்.
ரத்த தானம் தர விரும்புவோர் https://www.hsa.gov.sg/blood-donation இணையப்பக்கத்தில் பதிந்துகொள்ளலாம்.