உடற்பயிற்சி: தடைகளும் உந்துதலும்

உடற்பயிற்சி: தடைகளும் உந்துதலும்

2 mins read
1baeb4e9-d889-4de2-a771-f864f9c8aed1
உடற்பயிற்சி செய்வதற்கு நாம் பல இலக்குகளை வைத்திருப்போம். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த பல சாக்குப்போக்குகள் தடையாக அமைகின்றன.  - படம்: பேக்ஸல்ஸ்

உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என ஒவ்வொருவருமே இலக்கு கொண்டிருப்போம். ஆனால், அதற்கான நேரம் வரும்போது, அதனைத் தட்டிக் கழிக்க, மனத்தில் என்னென்னவோ சாக்குப்போக்குகள் தோன்றும்.

புத்தாண்டு உறுதிமொழியை நான்கு மாதங்களுக்குமேல் கடைப்பிடிப்பது கடினமாவதற்கு இந்த மனத்தடைகள் காரணமாகலாம்.

இதிலிருந்து மீள, முதலில் அவற்றைச் சாக்குப்போக்குகளாக நினைப்பதை நிறுத்துங்கள் என்கின்றனர் வல்லுநர்கள்.

மாறாக, அந்தக் காரணங்களை உண்மையான தடைகளாகக் கருதி, அவற்றைக் கடந்துவர ஒரு திட்டம் வகுத்துவிடுங்கள் என்கிறார் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் நடத்தையியல் ஆய்வாளர் கேட்டி மில்க்மேன்.

மேலும், சுயவிமர்சனத்தையும்  அவமானத்தையும் புறந்தள்ளுவது அவசியம் என்றும் அவை இரண்டும் நம் இலக்குகளை அடையத் தடையாக அமையும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

நேரம் இல்லை

நம் அன்றாட வாழ்க்கை பரபரப்பாக இருப்பதால், உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் இல்லாமல் போய்விட வாய்ப்பு உள்ளது.

உடற்பயிற்சி செய்வதற்கு, வாரத்திற்கு 30 முதல் 60 நிமிடங்கள் நேரத்தை ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக, நாள் முழுவதும் சிறு சிறு அசைவுகளைச் செய்தால்கூட போதும்.

எடுத்துக்காட்டாக, நம் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். அல்லது வேறு சில உடற்பயிற்சிகளிலும் ஈடுபடலாம். 

மொத்தத்தில், ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான ‘ஏரோபிக்’ உடற்பயிற்சியையும் 30 முதல் 60 நிமிடங்கள் முழு உடலுக்கு வலிமைதரும் உடற்பயிற்சியையும் மேற்கொள்வது அவசியம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். 

வீட்டிலேயே செய்யலாம் 

பொது இடங்களில் உடற்பயிற்சி செய்வது சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். அதற்கு, அவர்கள் வீட்டிலேயே உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். 

இவ்வாறான எதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்ள, நாம் எதற்காக உடற்பயிற்சி செய்கிறோம் என்ற காரணத்தை நினைவில் கொள்வது அவசியமாகும். 

அதுமட்டுமல்லாமல், ஆதரவாக இருக்கும் நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் பேசுவது உதவியாக இருக்கும். 

‘பணம் செலவழிக்க விரும்பவில்லை’

உடற்பயிற்சிக்கூடத்திற்கு சென்றுதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. வெளிப்புறங்களில் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். 

‘சோர்வாக உள்ளது’

சோர்வாக இருக்கும் நேரத்தில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. மேலும், உற்சாகமாக இருக்கும்போதும் முழு ஆற்றல் இருக்கும்போதும் உடற்பயிற்சி செய்வது நல்லது  என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். 

உடற்பயிற்சியில் ஈடுபடுவது நமக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும்.

குறிப்புச் சொற்கள்