தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எலும்பு மண்டலப் பிரச்சினைகள் வருமுன் காப்போம்

2 mins read
84f0ddb6-c456-4d08-9212-4b862a14d2ca
அன்றாடப் பழக்கங்களை சற்றே மாற்றிக்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் பிர‌ச்சினைகள் வராமல் காத்துக்கொள்ள முடியும். - படம்: இணையம்

பெரும்பாலானோருக்கு அலுவலகத்தில் நீண்டநேரம் அமர்ந்தவாறே பணியாற்றும் சூழல் உள்ளது.

இவ்வாறு தொடர்ந்து செய்வது பொதுவாக, கழுத்து எலும்பு சார்ந்த தசை நார்கள், சதை, இணைப்புத் திசுக்களில் பாதிப்பு ஏற்படுத்தி, கை, கழுத்து, தோள்பட்டை, முதுகு தொடங்கி கால் வரை வலியை உண்டாக்கும்.

சிலருக்கு முதுகு கூன் போடுவது தொடங்கி, நரம்பு மண்டல பாதிப்பு உள்ளிட்ட நீண்ட நாள் பிரச்சினைகளும் ஏற்படலாம். இவை தவிர, கண்களும் பாதிப்படையலாம்.

இவற்றைத் தடுக்க, உட்காரும் முறையையும் நிற்கும் முறையையும் சரி செய்வது அவசியம் என்கிறார் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான இணைப் பேராசிரியர் ஹமீத் ரசாக்.

தசை அழுத்தம் ஏற்படுத்தும் தவறான பழக்கங்கள்

முதலாவதாக, எப்போதும் சற்றே குனிந்த நிலையில் அமர்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாகத் தோள்பட்டையை முன்னோக்கி, அல்லது பக்கவாட்டில் சாய்த்தபடி அமரக்கூடாது என்கிறார் இவர். இது தசை இறுக்கத்தை ஏற்படுத்துவதோடு, ரத்த ஓட்டத்தையும் குறைக்கும்.

அடுத்ததாக, நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது கால் மேல் கால் போட்டு அமர்வதையும், கால்களைக் குறுக்காகக் கட்டியபடி உட்காருவதையும் தவிர்க்க வலியுறுத்துகிறார் மருத்துவர் ஹமீத் ரசாக். இது கால் மரத்துப்போதல், வலி உள்ளிட்டவற்றை ஏற்படுத்துவதுடன் முதுகெலும்பின் சீர்கேட்டுக்கும் வழிவகுக்கலாம்.

முக்கியமாக, பணியாற்றுகையில் கைப்பேசியில் பேச வேண்டிய தேவை ஏற்பட்டால், தோள்பட்டைக்கும் காதுக்கும் இடையில் வைத்துக்கொண்டு பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும் என்கிறார் ஹமீத் ரசாக்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

தொடர்ந்து உட்காருவதால் ஏற்படும் வலியையும் அதனைத் தடுக்க உதவும் சில குறிப்புகளையும் பகிர்ந்துகொண்டார் மருத்துவர் ஹமீத் ரசாக்.

உட்கார்ந்தபடியே நாள்முழுதும் பணியாற்றுபவர்கள், நேரம் கிடைக்கும்போதெல்லாம் கால்களை ஊன்றியபடி தரையில் உட்காருவது நல்லது.

எப்போதும் முதுகை நேராகவும் தோள்களை தளர்வாகவும் வைத்து அமரப் பழகவேண்டும்.

பணியிடத்தில், கணினித் திரை சரியாக கண் மட்டத்தில் அல்லது சற்றே கீழ் மட்டத்தில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

கைகள் பாதிவரை இல்லாமல், முழங்கை வரை முழுதாக மேசையில் வைத்தபடி அமர வேண்டும்.

ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து நடப்பது, கைகளை நீட்டுவது, உடலைச் சற்று அசைப்பது உள்ளிட்டவற்றைச் செய்ய வேண்டும்.

இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் தசைகளுக்கு ஓய்வளித்து, முதுகெலும்பு, கழுத்து என எலும்புகளில் வரும் பல பிரச்சினைகளை முன்கூட்டியே தவிர்க்கலாம் என்கிறார் இவர்.

குறிப்புச் சொற்கள்