ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘சரிகமப சீனியர்ஸ்’ நான்காம் பருவத்திற்கான நேர்முகத் தேர்வு மலேசியாவின் கோலாலம்பூரில் முதன்முறையாக நடைபெறவுள்ளது.
மலேசியர்கள் மட்டுமின்றி சிங்கப்பூரர்களும் இதில் போட்டியிடலாம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
‘சரிகமப சாம்ப்ஸ்’ போட்டியின் அண்மைப் பருவத்தில் பாட அழைக்கப்பட்ட சிங்கப்பூரின் அனன்யா சனூப், மலேசியாவின் ஹெமித்ரா ரவிச்சந்திரன் ஆகியோர் மேடையேறியதை அடுத்து, இந்நிகழ்ச்சி முதன்முறையாக இரு நாடுகளைச் சேர்ந்தோருக்கும் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு விஸ்மா துன் சம்பந்தன் டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர். சோமா உள்ளரங்கில் போட்டியாளர்களுக்கான தேர்வு தொடங்கும்.
பிரபலப் பின்னணிப் பாடகி சைந்தவி நடுவராகவும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அர்ச்சனாவும் அன்று பங்கேற்பார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
‘சரிகமப சீனியர்ஸ்’ நிகழ்ச்சி 2017ல் தமிழ்நாட்டில் மேடையேறியது.
18 வயதுக்கு மேற்பட்டோர் இந்நிகழ்ச்சிக்குப் பதிவுசெய்யலாம்.
மேல் விவரங்களுக்கு https://bit.ly/SRGMP4 என்ற இணையத்தளத்தை நாடவும்.