பிரீத்தி அசோகன்
திருமதி ஜிமின் சோய், 37, தம் பிள்ளைகளைப் பூங்காவிற்கு அழைத்துச் செல்லும்போது, அது உண்மையிலேயே உடற்பயிற்சிக்கான நடவடிக்கை என்பது பற்றி அவரின் பிள்ளைகளுக்குத் தெரியாது என்கிறார்.
சிங்கப்பூரில் உள்ள ப்யூர் குழுமத்தில் உள்ள யோகா, பிலேட்ஸ் பயிற்றுவிப்பாளரான அவர், தன் பிள்ளைகளுடன் உடற்பயிற்சி செய்யும்போது யோகா பயிற்சியும் சேர்த்துக் கற்றுக்கொடுப்பதாக கூறுகிறார்.
திருமதி சோய்யும் அவருடைய பிள்ளைகளான ஸ்கை நீ, 11, மேசன் நீ, 7, சில சமயங்களில் கணவருடன் மனித பிரமிட்டை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகச் சொல்கிறார். இந்நடவடிக்கை பலத்தை அதிகரிப்பதோடு சிந்தனை ஆற்றலையும் அதிகரிக்கும்.
“இவை போன்ற நடைபயிற்சிகளும் யோகா வகுப்புகளும் உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கும் வகையில் இருக்கும், ஆனால் என் பிள்ளைகள் அதை அப்படிப் பார்க்கவில்லை. ஒரு விளையாட்டாகத்தான் பார்க்கின்றனர்,” என்கிறார் திருமதி சோய்.
ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பு, கடந்த ஆண்டு வெளியிட்ட தேசிய விளையாட்டு பங்கேற்பு கணக்கெடுப்பில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும்போது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்திய ஒரு நேர்காணலில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்வதால் குடும்பப் பிணைப்பும் ஆரோக்கியமும் மேம்படுவதாகத் தெரியவந்தது.
இதன்மூலம், சிறார்களிடையே ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
பெற்றோருடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்ய பிள்ளைகளை ஊக்குவிப்பதற்கு ஏழு குறிப்புகள் உள்ளன.
1. சுவாரசிய, சாகச உடற்பயிற்சிகளை ஊக்குவிக்கலாம்
சிறார்கள் ஒரு பயணம் செய்யவோ சாகசத்தில் ஈடுபடவோ மிகவும் உற்சாகமடைவார்கள்.
அதனால், சிந்தனையைத் தூண்டும் வகையில் பிள்ளைகளுக்கு உடற்பயிற்சி செய்ய பெற்றோர் சொல்லித் தந்தால், பிள்ளைகள் நிச்சயமாக அதை விரும்புவர். இதனால் உடற்பயிற்சியை சுமையாகக் கருத மாட்டார்கள்.
2. உங்களைச் சுற்றி இருக்கும் இடங்களைப் பயன்படுத்துங்கள்
விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், திறந்தவெளி இடங்களுக்குப் பிள்ளைகளை அழைத்துச் செல்லுங்கள்.
3. பிள்ளைகளுக்கு சிறு காயம் ஏற்பட்டால் அஞ்சக்கூடாது
இளம் வயதிலேயே குழந்தைகளை விளையாட்டுகளுக்கு அறிமுகப்படுத்தி ஆரோக்கியமாக இருக்க பல வழிமுறைகளைக் கற்றுக்கொடுப்பது முக்கியம்.
இதன்மூலம் பிள்ளைகளுக்கு அச்சம் நீங்கும். மனதளவில் அச்சமின்றி இருக்க கற்றுக்கொள்வார்கள்.
4. உடற்பயிற்சிக்கு உகந்த சூழலை ஏற்படுத்துங்கள்
வீட்டில் சுறுசுறுப்பான சூழலை ஏற்படுத்துவதால், எந்த நேரத்திலும் பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருக்க ஊக்கமளிக்கப்படுவார்கள்.
5. சேர்ந்து விளையாட்டு ரசிகர்களாக இருங்கள்
ஒரு பிள்ளையின் விளையாட்டு நோக்கம் பெற்றோரின் ஆர்வத்தால் தூண்டப்படலாம்.
பெற்றோரைக் கண்டு பிள்ளைகள் பண்புநலன்களையும் வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுக்கொள்கிறார்கள்.
6. பிள்ளைகள் சொந்தமாக இலக்கை நிர்ணயிக்க தூண்டவேண்டும்
சிங்கப்பூர் யோகா சங்க இணை நிறுவனரான திரு டான், பிள்ளைகள் சொந்தமாக உடற்பயிற்சி இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய பெற்றோர் உதவ வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.
குறிப்பாக ஒரு விளையாட்டில் அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டவுடன் அவர்களை ஊக்குவித்து, அதற்கான வகுப்புகளுக்கு அனுப்பலாம் என்கிறார்.
7. உடற்பயிற்சி வகுப்புகளுக்குச் சேர்ந்து செல்லுங்கள்
பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் பல இலவச உடற்பயிற்சி நிகழ்வுகள் அல்லது வகுப்புகளுக்குப் பதிவுசெய்யலாம் என்று குடும்ப யோகா வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யும் யோகா பயிற்றுவிப்பாளர் திருமதி சோய் கூறுகிறார்.
இவை நெருக்கமான உறவை ஏற்படுத்துவதுடன் பிள்ளைகளுக்கு உடற்பயிற்சி மீது ஆர்வத்தை அதிகரிக்கும்.