டி.என்.இமாஜான்
பச்சைப் புல்வெளிப் போர்க்களக் கூடல்,
உலகைக் கூட்டும் உன்னதத் திருவிழா!
உருண்டோடும் ஒரு பந்தின் பின்னே,
உயிரைச் சேர்க்கும் உவகை விளையாட்டு!
கண்டங்கள் யாவும் எல்லைகள் கடந்து,
களம் காணும் வண்ணக் கனவிதுவே!
கால்களின் வித்தையில் உலக மக்கள்,
கண்கள் இமைக்காமல் ரசித்துப் பார்ப்பர்!
சுழலும் பந்தின் திசையினைக் கண்டு,
துடிக்கும் கோடிக் கணக்கான இதயங்களே!
எல்லா மொழிகளும் ஒன்றாய்க் கலந்து,
எழும்பும் இங்கே ‘கோல்’ முழக்கம்!
வெற்றிக் கோப்பை ஒன்றினை வெல்ல,
வியர்வை சிந்திடும் வீரர்களின் ஆட்டம்!
தோல்வி அடைந்தாலும் துணிவோடு அங்கே,
தோழமை காட்டும் தூயநல் பண்பே!
சாதி மதங்கள் யாவையும் கடந்து,
சாதிக்கும் மானுடத் திருநாள் இதுவே!
உலகக் கால்பந்துத் திருவிழா என்றும்,
உயிர்களை இணைக்கும் உன்னதப் பெருவிழா!

