புதுடெல்லி: தீபாவளித் திருநாளின்போது டெல்லியில் பெரிய அளவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த ஐஎஸ்ஐஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். இதை டெல்லி காவல் துறை கூடுதல் ஆணையர் பிரமோத் குஷ்வாஹா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தெற்கு டெல்லியில் ஒரு வணிக வளாகம், பூங்கா உள்ளிட்ட இடங்களில் அவர்கள் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தனர் என்பது தெரியவந்தது. அதற்காக அவர்கள் அந்த இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்துள்ளனர். இவர்களின் கட்டமைப்பு மற்றும் சதித் திட்டங்களை முழுமையாக அறிய அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகக் கூடுதல் ஆணையர் பிரமோத் தெரிவித்துள்ளார்.
கடந்த 16ஆம் தேதி அட்னான் என்பவரை டெல்லி சாதிக் நகரிலும் பிறகு அதே பெயருடைய மற்றொருவரை போபால் நகரில் கைது செய்தோம் என்றார் அவர்.

