கார் வாங்குவதற்கு 100 விழுக்காடு கடன் கிடைக்கும் என்று கார் விநியோக நிறுவனங்கள் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன.
வாடிக்கையாளர்கள் முன்கட்டணமாக செலுத்த, விலையின் 30, 40 விழுக்காட்டுத் தொகையை, மற்ற கடன் திட்டங்கள் மூலமாகச் செலுத்தலாம் என்று நிறுவனங்கள் விளம்பரப்படுத்துகின்றன. அந்தந்த நிறுவனங்களே கடனும் வழங்குகின்றன.
சட்டங்களில் இருக்கும் ஓட்டைகளை அவை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய கடன் திட்டங்களுக்கும், அதிகாரபூர்வத் திட்டங்களுக்கென இருக்கும் பாதுகாப்பு நடைமுறைகளைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கவேண்டும் என இயோ சூ காங் நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹோங் வெங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஹி திங் ரு, நிறுவனங்கள் தாங்களே கடன் வழங்குவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம், சிங்கப்பூர் நாணய ஆணையத்துடன் இணைந்து செயல்படுகிறதா என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பிப்ரவரி நான்காம் தேதி எழுத்துபூர்வமாகப் பதிலளித்த தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், “விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுகளின் மூலம் கடன் பெற்றுக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்கள் அறிவிறுத்தப்படுகிறார்கள்.
“அரசாங்கம் நிலைமையைக் கண்காணித்து வருகிறது. தேவைப்பட்டால், சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசாங்கம் விதிமுறைகளை முடுக்கிவிடும்,” என்று குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் குடும்பங்களில் வாகனம் வாங்கக் கடன் பெற்றவர்கள் இன்னும் செலுத்தாக கடன் தொகையின் மொத்த அளவு சென்ற ஆண்டு இறுதியில் சுமார் 12.4 பில்லியன் வெள்ளியாகப் பதிவானதென ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்குக் கிடைத்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்தத் தொகை, 12 ஆண்டுகளில் காணப்படாத அளவு அதிகமாகும்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில் இந்தப் போக்கு குறித்து கவலை எழுந்துள்ளது.

