தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை (என்யுஎச்) வளாகத்தில் உள்ள சில்லறை விற்பனை பகுதியில் தீச் சம்பவம் ஏற்பட்டது.
மே 16 (வியாழக்கிழமை) மதிய உணவு நேரத்தின் போது ஓர் உணவுபானக் கடையில் இருந்த ‘ஓவன்’ அடுப்பு தீப்பிடித்தது. அந்தக் கடை கட்டடத்தின் நான்காம் மாடியில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு காரணம் கருதி கிட்டத்தட்ட 100 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து பிற்பகல் நேரத்தில் தங்களுக்குத் தகவல் வந்ததாகவும் அதைத் தொடர்ந்து அங்கு அதிகாரிகள் விரைந்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. 10 நிமிடத்தில் வழக்க நிலைக்கு மருத்துவ வளாகம் திரும்பியது.
சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது.

