சிங்கப்பூரில் 1,000க்கும் மேற்பட்ட ஐபி முகவரிகள் (IP addresses) அகற்றப்பட்டுள்ளன.
இன்டர்போல் எனப்படும் அனைத்துலகக் காவல்துறையின் வழிநடத்தலில் நான்கு மாதங்கள் நீடித்த முறியடிப்பு நடவடிக்கையில் அந்த ஐபி முகவரிகள் அகற்றப்பட்டன. 26 நாடுகளின் சட்ட அமலாக்க அதிகாரிகள் அந்நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
‘ஆப்பரேஷன் செக்யூர்’ (Operation Secure) எனப்படும் அந்தக் கூட்டு நடவடிக்கை இவ்வாண்டு ஜனவரியிலிருந்து ஏப்ரல் மாதம் வரை மேற்கொள்ளப்பட்டது. ‘இன்ஃபோஸ்டீலர்ஸ்’ என்றழைக்கப்படும் தீங்குநிரல்களைக் குறிவைத்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
‘இன்ஃபோஸ்டீலர்ஸ்’, அனுமதியின்றி அமைப்புகள், நிறுவனங்களின் கட்டமைப்புகளை ஊடுருவுவதற்கானவை என்று இன்டர்போல் தெரிவித்தது. அதுபோன்ற தீங்குநிரல்கள், தனிப்பட்ட தகவல்களைத் திருடுபவை. கடவுச்சொற்கள், கடன் அட்டை விவரங்கள், மின்னிலக்க நாணய விவரங்கள் போன்றவை அவற்றில் அடங்கும்.
‘இன்ஃபோஸ்டீலர்ஸ்’ திருடும் தகவல்களை இணையக் குற்றவாளிகள் அதிகம் தவறாகப் பயன்படுத்துவதுண்டு. அத்தகவல்களை அடித்தளமாகக் கொண்டு அவர்கள் மேலும் இணையத் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று இன்டர்போல் புதன்கிழமை அறிக்கையில் குறிப்பிட்டது.
‘ஆப்பரேஷன் செக்யூர்’ நடவடிக்கையில் 20,000க்கும் அதிகமான அபாயகரமான ஐபி முகவரிகளும் இணையச் செயல்தளங்களும் அகற்றப்பட்டதாக இன்டர்பர்ல் தெரிவித்தது. 32 சந்தேக நபர்கள் பிடிபட்டதாகவும் இன்டர்போல் சொன்னது.