சீனப் புத்தாண்டு விமுறைக் காலத்தில் சிங்கப்பூரில் 1,000க்கும் மேற்பட்ட தனியார் மருந்தகங்கள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 18 வரை மருத்துவ உதவிகள் தேவைப்படுபவர்கள் அந்தத் தனியார் மருந்தகங்களை நாடலாம்.
மருத்துவ உதவிகள் தேவைப்படுபவர்கள் GPGoWhere இணையத்தளத்தில் மருந்தகங்களின் செயல்பாட்டு நேரங்கள், முகவரியைத் தெரிந்துகொள்ளலாம்.
விடுமுறைக் காலத்தில் 1,095 தனியார் மருந்தகங்கள் திறந்திருக்கும் என்று சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) அறிக்கை வெளியிட்டது.
மருத்துவ உதவிகளை நாடுபவர்கள் மருந்தகங்களுக்குச் செல்வதற்கு முன்னரே முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அமைச்சு அறிவுறுத்தியது.
உடல்நலம் சரியில்லாதவர்கள் தங்களுக்குத் தகுந்த சரியான மருந்தகங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் அமைச்சு நினைவூட்டியது.
சிறிய உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் தனியார் மருந்தகங்கள் அல்லது 24 மணிநேர மருந்தகங்களை அணுகலாம்.
மார்பு வலி, மூச்சுத்திணறல், கட்டுப்படுத்த முடியாத ரத்தப்போக்கு உள்ளிட்ட கடுமையான அல்லது உயிருக்கு ஆபத்தான நிலைகளில் உள்ளவர்கள் மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குச் செல்ல வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
சிறிய உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் 955 என்ற உதவி எண்ணுக்கு அழைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டது.
உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஏற்ற மருத்துவப் பராமரிப்பு நிலையங்களின் விவரம் அறிய NurseFirst உதவிச் சேவையைக் காலை 8 மணி முதல் இரவு 11 வரை அணுகலாம். அதன் தொலைபேசி எண்: 6262 6262.

