ஆடவர் ஒருவரைக் கத்தியால் குத்திவிட்டு 12 ஆண்டுகளுக்கும்மேல் தலைமறைவாக இருந்த மற்றோர் ஆடவருக்கு வியாழக்கிழமை (மே 15) ஈராண்டுகள், 10 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு 61 வயது சிங்கப்பூரரான டியோ லாய் சாய், மற்றோர் ஆடவரைக் கத்தியால் குத்தினார். தமது குடும்பத்தைப் பிரிந்து இருக்க முடியாததால் 2023 அக்டோபரில் சாய் காவல்துறையிடம் சரணடைந்தார்.
அடுத்தவரைத் தாக்கியது, அனுமதி பெறாத இடத்திலிருந்து சிங்கப்பூரைவிட்டு புறப்பட்டது போன்ற பல குற்றச்சாட்டுகளைச் சாய் கடந்த மாதம் ஒப்புக்கொண்டார்.
இதற்குமுன் நடந்த விசாரணையின்போது சாங்கியிலிருந்து ஒரு படகு முனையத்திலிருந்து தப்பியோடிய சாய், மலேசியாவைச் சென்றடைந்ததாகத் தெரியவந்தது. டியோ எப்படி நாட்டைவிட்டு வெளியேறினார் என்பதை அரசாங்க வழக்கறிஞர் குறிப்பிடவில்லை.
2011ஆம் ஆண்டு ஜனவரியில் சம்பவம் நிகழ்ந்தது. டியோவின் மனைவியும் அவருடன் நெருக்கமாகப் பழகிய ஆடவரும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2011, ஜனவரி 25ஆம் தேதி பின்னிரவு 1 மணிக்கு டியோவின் மனைவியும் மகளும் தாக்கப்பட்ட ஆடவருடனும் அவரது மகளுடனும் மனைவியின் வீட்டில் மது அருந்தினர்.
குற்றவாளியின் மகன் பார்த்து அதை தந்தையிடம் தெரிவித்ததை அடுத்து சண்டை மூண்டது.
பின்னர் சமையலறைக் கத்தியுடன் டியோ காலை 6 மணிக்குத் தமது மனைவியின் வீட்டுக்குச் சென்று 50 வயது ஆடவரைத் தாக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
அதையடுத்து வீட்டிலிருந்து வெளியேறிய டியோ, குப்பைத் தொட்டியில் கத்தியை வீசிவிட்டு டாக்சியில் ஏறி புறப்பட்டார்.