சிங்கப்பூரின் கடல்சார் வரலாற்றில் மிக முக்கிய அடையாளமாகத் திகழும், 130 ஆண்டுகள் பழமையான சுல்தான் ஷோல் கலங்கரை விளக்கத்திற்குப் பொதுமக்கள் நேரடியாகச் சென்று பார்வையிடும் புதிய சுற்றுலாத் திட்டத்தைச் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆணையம் மாதந்தோறும் இந்தச் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யவுள்ளது. இதற்கான படகுகள் பாசிர் பாஞ்சாங் படகு முனையத்திலிருந்து புறப்பட்டு, மூன்று மணி நேரப் பயணத்திற்குப் பிறகு மீண்டும் அதே இடத்திற்கு வந்தடையும்.
இந்தக் கலங்கரை விளக்கப் பயணத்துடன் சேர்த்து, சிங்கப்பூரின் கடல்துறை துறைமுகங்களின் வரலாறு, ஜூரோங் தீவு மற்றும் புலாவ் புகோம் ஆகிய பகுதிகளில் உள்ள தொழில்துறைகள் குறித்தும் பயணிகளுக்கு விரிவாக விளக்கப்படும்.
ஒரு திடமான பவளப்பாறைத் திட்டின் மீது அமைந்துள்ள இந்த இடத்திற்கு, கடந்த 1789ஆம் ஆண்டு இங்கு தரைதட்டிய ஒரு கப்பலின் நினைவாகவே ‘சுல்தான் ஷோல்’ என்று பெயரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சுல்தான் ஷோல் கலங்கரை விளக்கம் என்பது வெறும் வழிகாட்டி மட்டுமல்ல; அது சிங்கப்பூரின் கடல்துறை வளர்ச்சியின் அசைக்க முடியாத சாட்சியாகும்.
வரலாற்றுப் பதிவுகளின்படி, கடற்பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக 1800களின் நடுப்பகுதியிலேயே இங்கு ஒரு வழிகாட்டி விளக்கு அமைக்கப்பட்டிருந்தது.
பின்னர், 1876ஆம் ஆண்டு வெளியான ஓர் அறிக்கையில், அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒரு கிரானைட் வழிகாட்டி விளக்கு மின்னல் தாக்கத்தால் பகுதியளவு சேதமடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னரே தற்போதைய கலங்கரை விளக்கம் கட்டும் பணிகள் தொடங்கின என்றும் அறியப்படுகிறது.
அக்காலத்தில் கட்டப்பட்டாலும், காலத்திற்கு ஏற்ப இந்தக் கலங்கரை விளக்கம் தொடர்ந்து நவீனப்படுத்தப்பட்டு வந்துள்ளது. கடந்த 1984ஆம் ஆண்டு இது முழுமையாகத் தானியங்கி மயமாக்கப்பட்டது. தற்போது சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் இந்தக் கலங்கரை விளக்கின் ஒளி, சுமார் 15 கடல் மைல் தூரம் வரை தெளிவாகத் தெரியக்கூடிய திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

