சிங்கப்பூர்-மலேசிய காவல்துறை கூட்டு நடவடிக்கையில் 16 பேர் கைது

சிங்கப்பூர்-மலேசிய காவல்துறை கூட்டு நடவடிக்கையில் 16 பேர் கைது

1 mins read
fe93f91c-ec6b-4d9f-9d5b-7e7b80d013e3
ரொக்கம், மின்னியல் பொருள்கள், சூதாட்டக் கருவிகள் முதலியவற்றைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை 
Google News Preferred Icon

சட்டவிரோத குதிரைப் பந்தயச் சூதாட்டத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின்கீழ் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரும் மலேசியாவும் இணைந்து மேற்கொண்ட அந்தக் கைது நடவடிக்கையில் சிக்கியவர்கள் 50 வயதுக்கும் 78 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

ஜூன் 11ல் கைதானவர்கள், சட்டவிரோத குதிரைப் பந்தயச் சூதாட்டக் கும்பலுடன் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகின்றனர் என்று  சிங்கப்பூர் காவல்துறை மறுநாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

சிங்கப்பூர் காவல்துறையின் குற்றவியல் புலனாய்வுப் பிரிவையும் சிறப்பு செயலாக்க தளபத்தியத்தையும் சேர்ந்த அதிகாரிகள், சிங்கப்பூரிலுள்ள பல்வேறு பகுதிகளில் கூட்டாகச் சோதனையை நடத்தினர். அதில் 14 ஆடவர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

ரொக்கத்துடன் மொத்தம் 200,000 வெள்ளி கொண்டுள்ள மூன்று வங்கிக் கணக்குகள், திறன்பேசிகள், சூதாட்டப் பொருள்கள் முதலியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வங்கிக் கணக்குகளில் உள்ள பணம், சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாக நம்பப்படுகிறது.

மலேசியாவில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 53 வயது சிங்கப்பூர் ஆடவர் பிடிப்பட்டார். 

ஜூன் 13ஆம் தேதியன்று அந்த ஆடவர் மீது சூதாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்.

கைது செய்யப்பட்ட மற்றவர்கள் மீதான விசாரணை தொடர்கிறது. சூதாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படி, சட்டவிரோதமாக சூதாடிய குற்றத்திற்காக 10,000 வெள்ளி வரையிலான அபராதத்துடன் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்