சிங்கப்பூரில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட17,000 இளையர்கள் பள்ளிக்குச் செல்வது, அலுவலகத்தில் சென்று பணியாற்றுவது, ஏதேனும் ஒரு திறனில் பயிற்சி மேற்கொள்வது போன்ற எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை எனச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவர்கள். சிங்கப்பூரில் இருக்கும் மொத்த இளையர்களின் எண்ணிக்கையில் இது 4.1 விழுக்காடாகும். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 0.4 விழுக்காடு அதிகம்.
“இந்த இளையர்கள் தங்கள் முழுத் திறனை அடைய முடியாமல் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படும் நிலை ஏற்படலாம்,” என்றார் திரு சுவா.
பிரச்சினைகளில் இருக்கும் இளையர்கள், குறிப்பாகச் சாலைகளில் சுற்றித் திரியும் இளையர்களை ஆதரிப்பது தொடர்பான பிரச்சினையைச் சமாளிக்க சிங்கப்பூரில் புதன்கிழமையன்று (செப்டம்பர் 25) நடைபெற்ற முதல் இளையர்களை எட்டும் மாநாட்டில் உரையாற்றியபோது திரு எரிக் சுவா இவ்வாறு தெரிவித்தார்.


