சிங்கப்பூரில் 2025ன் முதல் 11 மாதங்களில் கைப்பற்றப்பட்ட கள்ள சிகரெட்டுகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க ஏறக்குறைய அதே நிலையில் உள்ளதாகச் சிங்கப்பூர்ச் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
2025 ஜனவரியிலிருந்து நவம்பர் வரை தீர்வை செலுத்தப்படாத 3.24 மில்லியன் சிகரெட் அட்டைப்பெட்டிகளைக் கைப்பற்றியதாகச் சுங்கத்துறை குறிப்பிட்டது.
2024ன் முதல் 11 மாதங்களில் கைப்பற்றப்பட்ட கள்ள சிகரெட் அட்டைப்பெட்டிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3.26 மில்லியன்.
2020லிருந்து 2022 வரை பிடிபட்ட கள்ள சிகரெட் அட்டைப்பெட்டிகளின் எண்ணிக்கையுடன் ஒப்புநோக்க 2024லும் 2025லும் பிடிபட்ட கள்ள சிகரெட் அட்டைப்பெட்டிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் அதிகம்.
வட்டார நாடுகளின் அரசாங்க வருவாயில் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 4 பில்லியன் டாலரைச் சட்டவிரோதப் புகையிலைப் பொருள்களால் இழப்பதால் ஆசியான் உறுப்பு நாடுகள் இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய-ஆசியான் வர்த்தக மன்ற நிர்வாக இயக்குநர் கிரிஸ் ஹம்ரி அறிவுறுத்தினார்.
கடுமையான அபராதங்கள் நிலைமையை ஓரளவு சரிசெய்தாலும் பிரச்சினையை அவை முழுமையாகத் தீர்க்காது என்றார் அவர்.

