தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் சனிக்கிழமை காலை வேளைகளில் ரயில் சேவைகள் காலதாமதமாகத் தொடங்கவுள்ளன.
அதனையொட்டி அதன் முக்கியப் பெருவிரைவு ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் மூன்று இடைவழிப் பேருந்துச் சேவைகள் வரும் மே 23ஆம் தேதி முதல் ஜூலை 4ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ளன.
இந்தப் பேருந்துச் சேவைகள் காலை 5 மணி முதல் காலை 8.30 மணி வரை இயங்கும் எனப் பொதுப் போக்குவரத்து நிறுவனமான எஸ்எம்ஆர்டி திங்கட்கிழமை (மே 18) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய ரயில் நிலையங்கள், தண்டவாளங்களை இணைக்கும் பணிகள் ஆகியவற்றிற்கு ஆதரவளிக்கும் வகையில், தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட், டௌன்டவுன் ரயில் பாதைகளின் சேவை நேரங்கள் சீரமைக்கப்படும் என எஸ்எம்ஆர்டி முன்னரே அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மே 22 முதல் ஜூலை 4 வரை தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் ரயில் சேவைகள் வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு முன்னதாகவே நிறைவடையும்; சனிக்கிழமைகளில் காலை 8.30 மணிக்குப்பின் காலதாமதமாகத் தொடங்கும்.
இந்த இடைவழிப் பேருந்துச் சேவைகளுக்கான கட்டணங்கள், வழக்கமான ரயில் பயணக் கட்டண முறையைப் பின்பற்றியே அமையும் என்று எஸ்எம்ஆர்டி குறிப்பிட்டுள்ளது.
மேலும், பயணிகள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறும், இந்த இடைவழிப் பேருந்துச் சேவையைப் பயன்படுத்தும்போது கூடுதல் பயண நேரத்தைக் கணக்கில் கொள்ளுமாறும் அது அறிவுறுத்தியுள்ளது.

