சிங்கப்பூரில் நடந்த $32 மில்லியன் மதிப்புள்ள விலைமதிப்புள்ள ஆடம்பரப்பொருள்கள் மோசடியில் சம்பந்தப்பட்டதாக மாது ஒருவர்மீது வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யாப் வீ பெங் சொம்ச்சாய் என்ற அந்த 30 வயது சிங்கப்பூரர், அந்த மோசடியில் கிடைத்த $35,000 தொகையைக் கையாண்ட குற்றத்தையும், டிரேட் லக்ஸரி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தபோது நியாயமான முறையில் நடந்துகொள்ளத் தவறியக் குற்றத்தையும் எதிர்நோக்குகிறார்.
அவர் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரை அக்குற்றங்களைப் புரிந்துள்ளார். விலைமதிப்புமிக்க பொருள்கள் மோசடியில் சம்பந்தப்பட்ட இரண்டு நிறுவனங்களில் அந்த மாது நிர்வகித்த நிறுவனமும் ஒன்று என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
அவர் 2022 மே 30ஆம் தேதி, டிரேட் லக்ஸரி நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து $35,000 தொகையை மற்றொருவரின் வங்கிக் கணக்குக்கு மாற்றியுள்ளார்.
அந்தப் பணத்தை விலைமதிப்புமிக்க பொருள்கள் மோசடிகளின் தலைமைக் குற்றவாளியாகக் கருதப்படும் பன்சுக் சிரிவாப்பா என்பவர் அனுப்பியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
டிரேட் லக்ஸரி நிறுவனத்தின் நடவடிக்கைகளைச் சரிவர நிர்வகிக்கத் தவறியதாகவும் யாப்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவரது வழக்கு செப்டம்பர் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும்.


