பிடோக் சாலை விபத்தில் 38 வயது ஆடவர் உயிரிழப்பு

பிடோக் சாலை விபத்தில் 38 வயது ஆடவர் உயிரிழப்பு

1 mins read
3f951d3e-47cc-405f-9167-3d72fd9c9b3d
தெம்பனிஸ் அவென்யூ 10ஐ நோக்கிச் செல்லும் பிடோக் நார்த் சாலையில் இவ்விபத்து நிகழ்ந்தது. - படம்: ஷின்மின் வாசகர்

மோட்டார்சைக்கிள், வேன், லாரி தொடர்புடைய விபத்தில் 38 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.

இவ்விபத்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் தெம்பனிஸ் அவென்யூ 10ஐ நோக்கிச் செல்லும் பிடோக் நார்த் சாலையில் நிகழ்ந்தது.

மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்ற ஆடவர் நிகழ்விடத்திலேயே மாண்டுபோனதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.

ஷின்மின் சீன நாளிதழ் வெளியிட்ட புகைப்படங்களில், அந்த மூன்று தடச் சாலையின் நடுவில் மோட்டார்சைக்கிள் கிடந்ததும் லாரி ஓரமாக நிறுத்தப்பட்டிருந்ததும் தெரிந்தது.

மாண்டவரின் பெயர் முகம்மது ரெஸைனி என அந்நாளிதழ் செய்தி குறிப்பிட்டது.

அவர் முழு நேர ‘ஃபுட்பாண்டா’ விநியோக ஊழியர் என்றும் அவருக்குப் பெற்றோரும் இளைய சகோதரரும் உள்ளனர் என்றும் திரு ரெஸைனியின் நண்பர்களில் ஒருவர் கூறினார்.

“அவர் அருமையான, கனிவான மனிதர்; மற்றவர்களுக்கு உதவ எப்போதுமே தயாராக இருந்தார்,” என்றார் அந்த 33 வயது நண்பர்.

திரு ரெஸைனியின் உயிரிழப்பு குறித்து தங்களது ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டு, அவரது நண்பர்கள் தங்களது ஈடுசெய்ய முடியாத இழப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்