இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்துவரும் சூழலில், இஸ்ரேலிலும் பாலஸ்தீன வட்டாரத்திலும் கிட்டத்தட்ட 40 சிங்கப்பூரர்கள் உள்ளனர்.
அங்குத் தொடர்ந்து இருக்க விரும்பும் சிங்கப்பூரர்களுடன் வெளியுறவு அமைச்சு தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
முன்னதாக 120க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் தரை அல்லது வான்வழியாகப் புறப்பட்டதாக அவர் கூறினார்.
சிங்கப்பூரர்கள் இஸ்ரேலிலிருந்து பாதுகாப்பாக வெளியேற உதவிய ஆஸ்திரேலியா, கனடா, போர்சுகல், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு சிங்கப்பூரின் நன்றிக்கடனை அவர் மறுஉறுதிப்படுத்தினார்.
டெல் அவிவிலிருந்து சோலுக்குச் சென்ற தென்கொரிய ராணுவப் போக்குவரத்து விமானம் ஒன்றில் இருந்த 220 பயணிகளில் ஐந்து சிங்கப்பூரர்கள் இருந்ததை அக்டோபர் 14ஆம் தேதி வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
இஸ்ரேலிலும் பாலஸ்தீன வட்டாரத்திலும் உள்ள சிங்கப்பூரர்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என்று வெளியுறவு அமைச்சு அக்டோபர் 10ஆம் தேதியன்று ஆலோசனை வழங்கியது.
சிங்கப்பூரர்கள் காஸா பகுதி, மேற்குக் கரை, காஸாவுடனான இஸ்ரேலிய எல்லைகள், லெபனான், சிரியா ஆகிய இடங்களுக்கான பயணங்களைத் தவிர்க்குமாறு முன்னதாக அமைச்சு சிங்கப்பூரர்களுக்கு ஆலோசனை கூறியிருந்தது.
இதற்கிடையே, சிங்கப்பூரர்கள் பல்வேறு வழிகளில் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்குப் பங்களிக்க முன்வந்ததாக வெளியுறவு இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் மலாய் மொழியில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எடுத்துக்காட்டாக, ரஹ்மத்தன் லில் ஆலமீன் அறநிறுவனம் $4.6 மில்லியனையும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் 350,000 வெள்ளியையும் பொதுமக்களிடமிருந்து திரட்டியுள்ளன.
இதுவரை கிடைத்திருக்கும் தாராள நன்கொடைகள் மனத்திற்கு ஆறுதலாக உள்ளதாகவும், மிக முக்கியமாக, சிங்கப்பூரர்களின் வலுவான ஒருமைப்பாட்டைக் காட்டுவதாகவும் திரு மாலிக்கி கூறினார்.