வாஷிங்டன்: மைக்ரோசாஃப்ட் நிறுவனம், அதன் ஊழியரணியில் கிட்டத்தட்ட 2.1 விழுக்காட்டை அதாவது கிட்டத்தட்ட 4,800 பேரை ஆட்குறைப்புச் செய்கிறது.
மைக்ரோசாஃப்ட், அதன் வர்த்தக, எக்ஸ்பாக்ஸ் வர்த்தகங்களை மறுசீரமைக்கிறது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்கட்டமைப்பை நோக்கி முதலீடுகளை மாற்றிவரும் மற்ற முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களின் வரிசையில் அதுவும் இப்போது இணைந்துள்ளது.
அந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட்டின் பங்கு விலை திங்கட்கிழமை (ஜூலை 6) 1 விழுக்காடு குறைந்தது.
ஊழியர்களுக்கு அனுப்பிய குறிப்பில், முதன்மை ஊழியர் அதிகாரி ஏமி கோல்மென், சில வழக்கமான பணிகளைத் தானியக்கமயமாக்குவதன் மூலம் வேலை செய்யும் முறையை ‘ஏஐ’ மாற்றிவருவதாகச் சொன்னார். இருப்பினும், இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை நிறுவனத்தின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப, வளங்களையும் செயல்பாட்டுக் கட்டமைப்புகளையும் மாற்றி அமைப்பதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதி என்றார் அவர்.
“இன்று நீக்கப்பட்ட பணியிடங்களுக்குப் பதிலாக ‘ஏஐ’ மாற்றப்படாது என்பதை நான் நேரடியாகத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதேநேரம், வேலை செய்யும் முறையை ஏஐ மாற்றிவருகிறது என்பதுதான் உண்மை,” என்று திரு கோல்மென் தெரிவித்தார்.
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஏஐ) தொழில்நுட்பத்திற்காகச் செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க செலவினம், இவ்வாண்டில் US$700 பில்லியனைத் (S$906 பில்லியன்) தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொழில்நுட்பத்தின் மூலம் லாபத்தைக் காட்ட வேண்டிய கட்டாயத்தையும் இதைச் செயல்படுத்துவதற்கான செலவை ஈடுகட்ட வேண்டிய நெருக்குதலையும் இது நிறுவனங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
அமேசான், மெட்டா நிறுவனங்களும் இவ்வாண்டில் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 23 விழுக்காடு சரிந்தன. இது 2022ஆம் ஆண்டிற்குப் பிறகு, முற்பாதியில் ஏற்பட்ட மிக மோசமான சரிவு. இதனைத் தொடர்ந்து, திங்கட்கிழமை மைக்ரோசாஃப்ட் ஆட்குறைப்பு அறிவிப்பை வெளியிட்டது.

