சிங்கப்பூரில் $5 மில்லியனுக்கும் மேல் இழப்பு ஏற்பட்ட மோசடிகள் தொடர்பாக 295 பேர் விசாரிக்கப்படுகின்றனர். 15 வயதுச் சிறுவனும் அவர்களில் ஒருவர்.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டோரில் 104 பேர் பெண்கள்.
295 பேரும் 15க்கும் 76க்கும் இடைப்பட்ட வயதினர் என்று காவல்துறை வியாழக்கிழமை (மே 21) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அவர்கள் சிங்கப்பூரில் நிகழ்ந்த 750க்கும் மேற்பட்ட மோசடிகள் தொடர்பாக விசாரிக்கப்படுவதாக அது மேலும் குறிப்பிட்டது.
இணைய வர்த்தக மோசடி, நண்பரைப்போல பாசாங்கு செய்து ஆள்மாறாட்ட மோசடி, வேலை மோசடி, அரசாங்க அதிகாரிபோல ஆள்மாறாட்டம் செய்து மோசடி, முதலீட்டு மோசடி, வாடகை தொடர்பான மோசடி ஆகியவற்றில் குற்றக் கும்பல்களுக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் அவர்கள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஏழு காவல்நிலையங்கள், வர்த்தக விவகாரத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் மே 7 முதல் மே 20 வரை இருவார காலம் நடத்திய சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.
மோசடி செய்தல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல், உரிமமின்றிப் பணம் அனுப்பும் சேவைகளில் ஈடுபடுதல் போன்ற குற்றங்கள் தொடர்பாகவும் அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
மோசடிக்காரர்கள் ஈட்டிய பணத்தைச் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்வது, சிம் கார்டுகள் அல்லது சிங்பாஸ் சான்றுகளை வழங்கி உதவுவது போன்ற குற்றங்களுக்கு 12 பிரம்படிகள் வரை தண்டனை விதிக்கப்படலாம்.

