ரெட்ஹில் பகுதியில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றில் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து, 50 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
ரெட்ஹில் குளோஸ், புளோக் 81இல் ஏற்பட்ட தீ குறித்து செப்டம்பர் 23ஆம் தேதி, இரவு 7.20 மணிக்குத் தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தீச்சம்பவத்தில், புளோக்கின் கீழ்த்தளத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கில் இருந்த கட்டுமானப் பொருள்கள் சம்பந்தப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
காவல்துறையினரும் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளும் இரண்டாம், மூன்றாம் தளங்களிலிருந்து ஏறக்குறைய 50 குடியிருப்பாளர்களை வெளியேற்றினர்.
தீ காரணமாக, அருகில் இருந்த சாலையின் சில பகுதிகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டதாக ஷின்மின் நாளிதழ் தெரிவித்தது.
யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்றும் தீ ஏற்பட்டதற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்ற ஆண்டு குடியிருப்புக் கட்டடங்களில் 970 தீச்சம்பவங்கள் ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை இவ்வாண்டு பிப்ரவரியில் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டின.
2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட 935 தீச்சம்பவங்களைக் காட்டிலும் அது 3.7 விழுக்காடு அதிகம்.

