கொள்ளையர்கள் இருவர் கொள்ளையடித்த 500,000 வெள்ளி மதிப்பிலான ரொக்கத்தையும் விலைமதிப்புமிக்கப் பொருள்களையும் எடுத்துவர சீனாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவருக்கு 30,000 யுவென் (5,560 வெள்ளி) வெகுமானமாக வழங்கப்பட்டிருந்தது.
குற்றவாளியான 28 வயது வூ ஜின்சிங் எனும் 28 வயது ஆடவர், அச்செயலில் ஈடுபட ஒப்புக்கொண்டதாகவும் கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதியன்று அவர் சிங்கப்பூர் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு விநியோகம் பணியாளராக வேலை செய்த அவர் ஒரு நாளுக்கு சுமார் 200 யுவென் ஊதியம் பெற்று வந்தார்.
சிங்கப்பூர் வந்த பிறகு அவர் புவன விஸ்தா பெருவிரைவு ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள வனப் பகுதிக்குச் சென்று ஆரஞ்சு நிற ஹர்மிஸ் பெர்க்கின் (Hermes Birkin) பையைப் பெறச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 45,000 வெள்ளி மதிப்புகொண்ட அப்பையில் கொள்ளையடிக்கப்பட்ட சில பொருள்கள் இருந்தன.
சிறிது நேரம் கழித்து அவர் கைது செய்யப்பட்டார். ஜூலை 29ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
திங்கட்கிழமையன்று (டிசம்பர் 16) வூக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மீதான குற்றம், ஒரு குற்றக் கும்பலுடன் தொடர்புடையது என்று தெரிவிக்கப்பட்டது.