$1.6 மி. மதிப்பு பணம் அனுப்பும் சேவை வழங்கியதாக நம்பப்படும் வெளிநாட்டவர்

$1.6 மி. மதிப்பு பணம் அனுப்பும் சேவை வழங்கியதாக நம்பப்படும் வெளிநாட்டவர்

2 mins read
00613c63-de6a-4dea-aba9-45139af9b359
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

மற்ற நாடுகளுக்கு மொத்தம் 1.4 மில்லியன் வெள்ளி மதிப்பிலான பணம் அனுப்பும் சேவை வழங்கியதாகச் சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவர் அறுவர் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 5) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்கள் 2020ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இவ்வாண்டு மே மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தக் குற்றங்களைப் புரிந்ததாக நம்பப்படுகிறது.

இந்தோனீசியாவைச் சேர்ந்த 28 வயது ஜாஜாங் ‌மெளலானா ஹிதயத்துல்லோ, சீனாவைச் சேர்ந்த 36 வயது ‌ஷூ எர்லிங், மியன்மாரைச் சேர்ந்த 40 வயது லால் ரெம் ருவாத்தி, இலங்கையைச் சேர்ந்த 47 வயது முகம்மது மிஃப்ராஸ் ஸாகிர், பங்ளாதே‌ஷைச் சேர்ந்த ஹசான் நாகிட், 34, முக்குல், 39, ஆகியோர் அந்த சந்தேக நபர்கள். அவர்கள் அனைவரின் மீதும் கட்டணச் சேவைச் சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அத்தகைய சட்டவிரோதப் பணம் அனுப்பும் சேவை, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுவது, பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி வழங்கப்படுவது ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படாமல் இருந்து வருவதாக காவல்துறை தெரிவித்தது.

சட்டவிரோதமாக பணிப்பெண்களுக்குப் பணம் அனுப்புவது, வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து பணத்தைப் பெற்று அதை சட்டவிரோதமாக அவர்களின் குடும்பங்களுக்கு அனுப்புவது போன்ற செயல்களில் சந்தேக நபர்கள் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

ஜாஜாங், லால் ரெம் ருவாத்தி, ஹசான் முவரும் இம்மாதம் 19ஆம் தேதியன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிஃப்ராசின் வழக்கு இம்மாதம் 26ஆம் தேதியன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.

‌‌ஷூ, முக்குல் ஆகியோரின் வழக்குகளுக்கான நீதிமன்ற விசாரணை வரும் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் மற்ற நாடுகளுக்குப் பணம் அனுப்பிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் முதல்முறை குற்றவாளிகளுக்கு மூவாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் 125,000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்நீதிமன்றம்பணம் அனுப்பும் சேவைகுற்றச்சாட்டு