கடந்த ஜூலை 24ஆம் தேதி உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் நுழைந்த ஒரு காரைச் சோதனையிட்டபோது 5,900க்கும் மேற்பட்ட மின்சிகரெட்டுகளும் புகையிலை சார்ந்த பொருள்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் தனது ஃபேஸ்புக் பக்கம் வழியாகப் பதிவிட்டது.
மலேசியப் பதிவெண் கொண்ட அந்தக் கார் மூலம் மின்சிகரெட்டுகளைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.
அந்தக் காரை முழுமையாகச் சோதனையிடும்படி ஆணையத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அப்போது, அதனுள் மின்சிகரெட்டுகள், அது தொடர்பான பொருள்கள், 150 பெட்டிகளில் வெப்பக்குச்சிகள் (heatstick) அல்லது வெப்பப் புகையிலைப் பொருள்கள் ஆகியவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அவை அனைத்தும் காரின் பல்வேறு பகுதிகளுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததாக ஆணையம் குறிப்பிட்டது.
மேல் விசாரணைக்காக இவ்வழக்கு சுகாதார அறிவியல் ஆணையத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்தது.