சீனாவின் 75வது தேசிய தினம் அக்டோபர் 1ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு சீன அதிபர் ஸி ஜின்பிங்கிற்கு அதிபர் தர்மன் சண்முகரத்தினமும் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
“சீனாவில் 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். அறிவியல், நீடித்த நிலைத்தன்மை, கலை, கலாசாரம் ஆகிய துறைகளில் உலகளாவிய பங்களிப்பை சீனா அளித்துள்ளது,” எனத் திரு தர்மன் தனது வாழ்த்துக் கடிதத்தில் கூறியுள்ளார்.
சீனாவின் வளர்ச்சிப் பயணமும் நவீனமயமாக்கல் திட்டங்களும் மிகவும் பாராட்டுக்கு உரியவை என்றார் அவர்.
சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே இருக்கும் உறவு, வலுவான பொருளியல் இணைப்பு, பலதரப்பட்ட ஒத்துழைப்பு, இருநாட்டு மக்களுக்கிடையிலான உறவுகள் ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகின்றன என்று அவர் கூறியதாக வெளியுறவு அமைச்சு அக்டோபர் 1ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
சிங்கப்பூரர்கள் சார்பாக சீனாவின் தேசிய தினத்திற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் வோங் தனது கடிதத்தில் தெரிவித்தார்.
உலகின் மிகப் பெரிய மற்றும் முக்கியப் பொருளியலைக் கொண்ட நாடாக சீனா மாறுவதற்கு சீனா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே நல்லுறவு நீடித்து வருகிறது என்றார் பிரதமர் வோங்.