தண்ணீருடன் ‘பிளீச்’ ரசாயனம் கலந்து நண்பரின் முகத்தில் ஊற்றிய 76 வயது ஆடவருக்கு 4 வாரங்கள் சிறைத் தண்டனையும் 1,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
லீ ஆ செங் என்னும் அந்த ஆடவர், 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி இரவு 10 மணிவாக்கில் யூஹூவா வில்லேஜ் சந்தை மற்றும் உணவு நிலையத்திற்கு சென்றார்.
அங்கு தமது 66 வயது நண்பருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, லீ, பிளீச் கலவையை ஆடவர்மீது ஊற்றினார்.
பிளீச் கலவை கண்ணில் பட்டதால் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டதாக 66 வயது ஆடவர் காவல்துறையில் புகார் கொடுத்தார்.
அதன்பின்னர் லீ, 2024ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி ஜூரோங் ஈஸ்ட்டில் தெரியாத நபர் ஒருவரின் வீட்டுக் கதவில் உள்ள பூட்டில் பசையை ஊற்றி அதைப் பயன்படுத்த முடியாத நிலைக்கும் மாற்றினார்.
இதேபோன்று 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வேறு ஒரு வீட்டுக் கதவின் பூட்டில் லீ பசையை ஊற்றினார்.
ஆடவரின் நடவடிக்கைகள் தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் விசாரணை தொடங்கியது.
லீ தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
லீ அபராதம் செலுத்தவில்லை என்றும் அதனால் மேலும் இரண்டு நாள் சிறையில் இருப்பார் என்றும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.