2022ஆம் ஆண்டு மட்டும் மின்சிகரெட்டைப் பயன்படுத்திய குற்றத்திற்காக 800 மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தொடக்கப்பள்ளி முதல் உயர்கல்வி நிலையங்கள் வரை பயிலும் மாணவர்கள்.
அண்மைக் காலமாக மாணவர்களிடையே மின்சிகரெட்டுகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இது சமூகத்திற்கு மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒன்றாகக் கருதப்படுகிறது.
மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்திய மாணவர்களை சுகாதார அறிவியல் ஆணையத்திடம் கல்வி அமைச்சு ஒப்படைத்ததாக ஆணையம் தெரிவித்தது.
அவர்களில் சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், மின்சிகரெட்டை வாங்குவது, பயன்படுத்துவது, வைத்திருப்பது போன்ற குற்றம் புரிவோருக்கு $2,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
2020ஆம் ஆண்டுக்கு முன்பு மின்சிகரெட்டுகள் பயன்படுத்தியதற்காக ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 50க்கும் குறைவாக இருந்ததாக கல்விக்கான இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் இம்மாதத் தொடக்கத்தில் கூறியிருந்தார்.
மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்தும் பழக்கம் மாணவர்களிடத்தில் மட்டுமின்றி சமூகத்தில் உள்ள மற்ற பிரிவினருக்கும் இருப்பது குறித்து அரசாங்கமும் பல்வேறு சுகாதார அமைப்புகளும் கவலை கொள்வதாக அவர் சொல்லியிருந்தார்.