சாலையைக் கடக்கும் இடத்தில் தமது தந்தையின் தலையில் குடையால் அடித்த 78 வயது முதியவரைத் தள்ளிவிட்டதில், அவர் உயிரிழந்த சம்பவத்திற்காக 37 வயது ஆடவருக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) ஒன்பது மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
காயம் விளைவித்த குற்றத்தை ஜிம்மி யார் ஹோக் லாங் ஒப்புக்கொண்டார்.
கடந்த 2025 மே 25ஆம் தேதி காலை 9 மணிக்கு முன், அப்பர் சிராங்கூன் சாலை, வோல்ஸ்கெல் சாலைச் சந்திப்பில் ஜிம்மியின் 70 வயதுத் தந்தை நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவருக்கு அறிமுகமான கோ கிம் இன், பின்னாலிருந்து குடையால் அவரது தலையில் அடித்தார். அதைப் பார்த்த ஜிம்மி, கோவை வேகமாகத் தள்ளிவிட்டார். கீழே விழுந்த கோவின் தலையில் அடிபட்டது. இரு நாள்களுக்குப் பிறகு டான் டோக் செங் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.
இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கெனவே தகராறு இருந்துள்ளது. 2024ல் கோ, ஜிம்மியின் தந்தையைத் தாக்கியதற்காகக் காவல்துறை எச்சரிக்கை பெற்றிருந்தார்.
ஜிம்மியின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சை பெற்று வருபவர் என்றும், தந்தையின் பாதுகாப்பைக் கருதியே ஜிம்மி திடீரென அவ்வாறு நடந்துகொண்டார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


