ஜாலான் புசாருக்கு அருகே சனிக்கிழமை (மே 9) நடந்த விபத்தில், நடந்து சென்றுகொண்டிருந்த 84 வயது மூதாட்டி காருக்கடியில் சிக்கிகொண்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் அவரை மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளோக் 25 ஜாலான் பெர்சே பகுதியில் நடந்த விபத்து குறித்து சனிக்கிழமை காலை 10.15 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் அந்த மூதாட்டியை மீட்டனர். பின்னர் அவர் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
மீட்பு நடவடிக்கை தொடர்பில் ஷின் மின் நாளேடு வெளியிட்டிருந்த படத்தில் குடிமைத் தற்காப்புப் படையினர் பத்துக்கும் மேற்பட்டோர் விபத்துக்குள்ளான வாகனத்தைச் சுற்றிலும் பணியில் ஈடுபட்டிருந்ததைக் காண முடிந்தது. அவர்கள் 15 நிமிடங்களில் மூதாட்டியை மீட்டதாக வழிப்போக்கர் ஒருவர் நாளேட்டிடம் கூறினார்.
சம்பந்தப்பட்ட காரை ஓட்டிய ஆடவர் தனியார் வாடகை கார்ச் சேவை வழங்குபவர் என்று கருதப்படுவதாகவும் அவர் பயணி ஒருவரை ஏற்றிச்செல்ல முனைந்தபோது அந்த விபத்து நடந்ததாகக் கூறியதாகவும் ஷின் மின் குறிப்பிட்டது.
விசாரணை தொடர்கிறது.

