சாங்கி விமான நிலையத்தின் ஏர்போர்ட் பொலிவார்ட் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) இரவு நிகழ்ந்த கார் விபத்தில் 82 வயது முதியவர் உயிரிழந்தார்.
விபத்தில் சிக்கிய முதியவர் மயக்க நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்று காவல்துறை தெரிவித்தது.
வெள்ளிக்கிழமை இரவு 11.25 மணியளவில் விபத்து நிகழ்ந்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
முனையம் ஒன்றிலிருந்து முனையம் 2க்குச் செல்லும் இணைப்புச் சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கியதில் விபத்து ஏற்பட்டது.
விபத்துக்குள்ளான காரில் பயணம் செய்த 60 வயது ஓட்டுநரும் 44, 74 வயதுகளில் இருக்கும் இரு பெண்களும் காயமடைந்தனர். மூவரும் சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து குறித்து 60 வயது ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை தொடர்கிறது.

